மொட்டைமாடிகளில் தஞ்சமடைந்த மக்கள்... தண்ணீர், உணவு இன்றி தவிப்பு: கைகொடுத்த ஹெலிகாப்டர்
சென்னை: வீட்ல இருந்த வரைக்கும் ஓரளவு சமாளிச்சு சாப்பிட்டாச்சு... அடுத்த வேளை உணவுக்கும், குடிநீருக்கும் என்ன செய்வது என்பதுதான் புறநகர்வாசிகளின் இன்றைய நிலை. பார்த்து பார்த்து கட்டிய வீடுகளை வெள்ளம் சூழ்ந்திருக்க... ஆசை ஆசையாய் வாங்கிய கார்களும், வாகனங்களும், தண்ணீரில் மூழ்கியிருக்க செய்வதறியாது தவித்து வருகின்றனர் சென்னையின் புறநகர்வாசிகள். மொட்டைமாடியில் தஞ்சமடைந்து உணவுக்கும், குடிநீரும் இன்றி தவித்தவர்களுக்கு ஹெலிகாப்டர்கள் மூலம் உணவுகள் கொடுக்கப்பட்டு காப்பாற்றப்பட்டுள்ளனர்.
மழை நின்ற போதிலும் மக்களின் துயரம் இன்னமும் ஓய்ந்தபாடில்லை. குடியிருப்பு பகுதிகளில் தேங்கிய தண்ணீர் இன்னும் வடியாமல் அப்படியே உள்ளதால் மக்கள் பெரிதும் அவதிக்கு உள்ளாகி இருக்கிறார்கள்.
புறநகரில் தாழ்வான குடியிருப்பு பகுதிகளில் உள்ள வீடுகளை சுற்றி ஏற்கனவே தண்ணீர் தேங்கி நிற்பது ஒருபுறம் இருக்க ஏரிகள், குளங்களில் ஏற்பட்ட உடைப்பு காரணமாக பெருக்கெடுத்த வெள்ளம் அந்த பகுதிகளில் மேலும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.
மூழ்கடித்த தண்ணீர்
கூடுவாஞ்சேரி பகுதிகளில் குடியிருப்புகளில் தரை தளம் அளவுக்கு தண்ணீர் தேங்கி உள்ளது. சில வீடுகளில் உள்ளவர்கள் மொட்டை மாடியில் தஞ்சம் அடைந்து உள்ளனர். குடிநீர், உணவு, பால் போன்ற அத்தியாவசிய பொருட்கள் இல்லாமல் அவர்கள் தவிக்கிறார்கள்.
தத்தளிக்கும் மக்கள்
மேற்கு தாம்பரம், முடிச்சூர், வேளச்சேரி ஆகிய பகுதிகள் வெள்ளக்காடாக காட்சி அளிக்கின்றன. மேற்கு தாம்பரம், முடிச்சூர் பகுதிகளில் உள்ள வீடுகள் தண்ணீரில் மூழ்கி உள்ளன. வீடுகளில் சுமார் 5 அடி உயரத்துக்கு தண்ணீர் நிற்கிறது. கார்கள், இருசக்கர வாகனங்கள் தண்ணீரில் மூழ்கிய நிலையில் அப்படியே நிற்கின்றன.
உணவு, தண்ணீர்
வெள்ளத்திற்கு தப்பி மொட்டை மாடியில் தஞ்சமடைந்த மக்களின் நிலையே மிகவும் பரிதாபம்தான். கண்ணுக்கு எட்டிய தூரம் வரை வெள்ளக்காடாக இருந்தாலும் குடிக்க குடிநீர் இன்றி தவித்துதான் போனார்கள். சிலர் வீடுகளின் மொட்டை மாடியில் நின்றபடி உணவும் குடிநீரும் கேட்டு குரல் எழுப்பினார்கள். ஹெலிகாப்டர்கள் மூலம் அவர்களுக்கு உணவுப்பொட்டலங்களும், குடிநீர் பாட்டில்களும் போடப்பட்டன.
முப்படையினர் மீட்பு
மழை வெள்ளத்தில் சிக்கி தவிப்பவர்களை மீட்கும் முயற்சியில் தீயணைப்பு படையினர், மாநில பேரிடர் மீட்பு படையினர், தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் ஈடுபட்டு உள்ளனர். இவர்களுடன் ராணுவம், கடற்படை, விமானப்படையைச் சேர்ந்த வீரர்களும், கடலோர பாதுகாப்பு படை வீரர்களும் மழை, வெள்ளத்தில் சிக்கி தவிக்கும் மக்களை மீட்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டனர்.
பல ஆயிரம் பேர் மீட்பு
தீயணைப்பு துறையினர், மீன்வளத்துறையினர் ஆகியோருடன் போலீசார் இணைந்து 130 படகுகளின் உதவியுடன் 11 இடங்களில் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். தாம்பரம் நகராட்சி, பெருங்களத்தூர் பேரூராட்சி, வரதராஜபுரம் ஊராட்சி, திருமுடிவாக்கம் ஊராட்சி பகுதிகளில் சிக்கித்தவித்த சுமார் 13 ஆயிரம் பேர் மீட்கப்பட்டனர்.
ஹெலிகாப்டர் மூலம் மீட்பு
சில இடங்களில் ஹெலிகாப்டர்கள் மூலம் பலர் மீட்கப்பட்டனர். தாம்பரம் சி.டி.ஓ. காலனி, புளுஜாக்கர், வரதராஜபுரம், பல்லவன் குடியிருப்பு, ராயப்பா நகர், திருமுடிவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளத்தில் சிக்கி தவிக்கும் மக்களுக்கு விமானப்படை ஹெலிகாப்டர்கள் மூலம் உணவுப்பொட்டலங்கள், பிஸ்கெட், குடிநீர் பாட்டில்கள் வழங்கப்பட்டன.
முடங்கிய மக்கள்
வேளச்சேரியில் விஜயநகர் 13-வது பிரதான சாலை, 8-வது பிரதான சாலை, சங்கர் நகர் உள்பட பல்வேறு பகுதிகளை வெள்ளம் சூழ்ந்து உள்ளது. அப்பகுதிகளில் உள்ள வீடுகளில் மழைநீர் புகுந்ததால், அத்தியாவசிய பொருட்கள்கூட வாங்க முடியாமல் தவித்தனர். அவர்களை தனியார் பங்களிப்புடன் போலீசார் படகுகள் மூலம் மீட்டு வெளியே கொண்டுவந்தனர். மேலும் வீடுகளின் உள்ளேயே முடங்கியவர்களுக்கு தண்ணீர், பிஸ்கெட், உணவு பொட்டலங்கள், பால் உள்ளிட்ட பொருட்களும் வினியோகிக்கப்பட்டது.
குடிசைகள் மூழ்கின
செம்பரம்பாக்கம் ஏரி திறக்கப்பட்டதால் அடையாறு ஆற்றின் கரையோரம் உள்ள பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. சைதாப்பேட்டை பாலம் அருகே கரையோரம் வசித்த மக்கள் அங்கிருந்து பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர். ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடிசை வீடுகள் வெள்ளத்தில் மூழ்கி உள்ளன. அடையாறு ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக கோட்டூர்புரத்தில் உள்ள வீட்டுவசதி வாரிய குடியிருப்புக்குள் வெள்ளம் சூழ்ந்தது. இதனால் தரை தளத்தில் உள்ள வீடுகளின் உள்ளே மழை நீர் புகுந்தது.
வெளியே வர மறுப்ப
பெரும்பாக்கம் குளோபல் மருத்துவமனை அருகே அடுக்கு மாடிகளில் மாட்டிக் கொண்டிருந்தவர்கள் மீட்கப்பட்டனர். தரைத்தளத்தில் 7 அடிவரை தண்ணீர் இருப்பதால்,மக்கள் முதல்,இரண்டாம் தளங்களில் தங்கி உள்ளனர்.பெரும்பாலனவர்கள் வீட்டை விட்டு வெளியே வர விருப்பமில்லாமல் வீட்டிற்குள்ளேயே தண்ணீர் வடிந்துவிடும் என்ற நம்பிகையில் உள்ளனர்.ஆனால் உபரி நீர் வெளியேற வெளியேற தண்ணீர் அதிகமாகும்.
காத்திருக்கும் மீட்புபடையினர்
இதன் விளைவுகள் தெரியாமல் வீட்டை விட்டு வெளியேற மறுத்துள்ளனர்.ஆனாலும் பெரும்பாக்கம் குளாபல் மருத்துவமனையில் தீயணைப்பு வீரர்கள் தங்க வைக்கப் பட்டுள்ளனர்.எந்த நேரம் வேண்டுமானலும் அழைக்கலாம். ஜெயராமன் தீயணைப்புத் துறை; 9445086094 (பெரும்பாக்கம்) பள்ளிக்கரனை சப். இன்ஸ்பெக்டர் எண்; 9498130543 என்றும் தெரிவித்துள்ளனர்.