சென்னைவாசிகளுக்கு ஒரு நற்செய்தி… மேலும் 200 அம்மா உணவகங்கள் திறக்கப்படுகிறது!
சென்னை: சென்னையில் மேலும் 200 அம்மா உணவகங்கள் திறக்கப்பட உள்ளதாம்.
ஏழை மக்கள் குறைந்த விலையில் வயிறு நிறைய சாப்பிட சென்னை மற்றும் அனைத்து மாநகராட்சிகளில் அம்மா உணவகங்கள் திறக்கப்பட்டு செயல்படுகின்றன. சென்னையில் வார்டுக்கு ஒரு உணவகம் வீதம் 200 வார்டுகளில் 200 அம்மா உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன. இது தவிர சென்னையில் உள்ள 3 அரசு மருத்துவமனைகளிலும் அம்மா உணவகங்கள் உள்ளன.

இந்நிலையில் சென்னை உள்ள 200 வார்டுகளில் வார்டுக்கு ஒன்று வீதம் மேலும் 200 அம்மா உணவகங்கள் திறக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி அறிவித்து அதற்கான வேலையிலும் இறங்கியது. இந்த கூடுதல் உணவகங்கள் இன்னும் 2 மாதங்களில் திறக்கப்படுமாம்.
இது தவிர கீழ்ப்பாக்கம், ராயப்பேட்டை அரசு மருத்துவமனைகள், ராயபுரம் ஆர்.எஸ்.ஆர்.எம். மருத்துவமனை, திருவல்லிக்கேணி கஸ்தூரிபா பெண்கள் மற்றும் குழந்தைகள் மருத்துவமனை ஆகியவற்றிலும் அம்மா உணவகம் அமைக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து சென்னை மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில்,
முதல்கட்டமாக சென்னையில் அமைக்கப்பட்ட 200 அம்மா உணவகங்கள் மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் பயன்படுத்தப்படாமல் இருந்த கட்டிடங்களில் அமைக்கப்பட்டன. ஆனால் இம்முறை 40 உணவகங்கள் மட்டுமே ஏற்கனவே கட்டப்பட்ட இடத்தில் அமைக்கப்படுகிறது. மீதமுள்ளவை மாநகராட்சி இடத்தில் கட்டப்பட்டு வருகின்றன. இந்த கட்டுமானப்பணி இன்னும் 45 நாட்களில் முடியும். குடிசைப் பகுதிகளுக்கு அருகே அம்மா உணவகங்களை அமைக்க முயற்சித்து வருகிறோம். புதிய உணவகங்கள் இன்னும் 2 மாதங்களில் திறக்கப்படும் என்றார்.












Click it and Unblock the Notifications