சென்னை மக்களுக்கோர் நற்செய்தி... வியாழக்கிழமையும், வெள்ளிக்கிழமையும் மழை பெய்யுமாம்!
சென்னை: சென்னையில் வருகிற வியாழக்கிழமையும், வெள்ளிக்கிழமையும் மழை பெய்யலாம் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. பருவ மாற்றத்தால் இந்த இரண்டு நாள் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென் மேற்குப் பருவ மழை தொடங்கி விறுவிறுப்பாக ஓடிக் கொண்டிருக்கிறது. கேரளாவை மழை வெளுத்து வாங்கி வருவதைப் போல அதையொட்டியுள்ள தமிழக மாவட்டங்களிலும் நல்ல மழை பெய்து வருகிறது. குறிப்பாக கன்னியாகுமரி மாவட்டத்தில் செம மழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன.
இந்த நிலையில் பருவ நிலை மாற்றம் காரணமாக சென்னையில் வருகிற வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமை 2 நாட்கள் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த 2 நாட்களும் வானம் மேகமூட்டமாக காணப்படும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளின் சில இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யும்.
புதன்கிழமை 77 டிகிரி முதல் 87 டிகிரி வரையும், வியாழக்கிழமை 75 டிகிரி வரையும் வெயில் பதிவாகும். மாலை மற்றும் இரவு நேரங்களில் மழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வானிலை மைய அதிகாரி மேலும் கூறுகையில், ஜூன் மாதத்தில் வழக்கமாக சென்னையில் 18 மில்லிமீட்டர் அளவுக்கு மழை பெய்யும். ஆனால் இந்த ஆண்டு அது 43 மில்லிமீட்டர் கூடுதலாக பெய்துள்ளது. அதாவது 61 மிமீ மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக கடந்த 2010ம் ஆண்டு இதே காலகட்டத்தில் சென்னையில் 136 மில்லிமீட்டர் அளவுக்கு மழை பெய்திருந்தது.