சென்னை ஹைகோர்ட்டிற்கு 6 புதிய நீதிபதிகள் நியமனம்
சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்திற்கு புதிதாக 6 நீதிபதிகளை நியமிக்க குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி அனுமதி அளித்துள்ளார்.
சென்னை உயர் நீதிமன்றத்தில் அனுமதிக்கப்பட்ட நீதிபதிகளின் எண்ணிக்க 60ல் இருந்து 75 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் அதன் மதுரை கிளையில் 34 நீதிபதிகள் தான் உள்ளனர். அனுமதிக்கப்பட்ட இடங்களில் 41 காலியாக உள்ளன.

நீதிபதிகள் பற்றாக்குறையால் பல வழக்குகள் தேக்கமடைந்துள்ளன. இதையடுத்து காலி பணியிடங்களை நிரப்பத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதில் முதல்கட்டமாக 6 வழக்கறிஞர்கள், 3 மாவட்ட நீதிபதிகளின் பெயர்கள் அடங்கிய பட்டியலை உயர் நீதிமன்ற மூத்த நீதிபதிகள் குழு பரிந்துரைத்தது.
பரிந்துரைக்கப்பட்ட 9 பேரில் 6 பேரை உயர் நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க உச்ச நீதிமன்றம், பிரதமர் அலுவலகம் மற்றும் சட்டத்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. இதையடுத்து 6 புதிய நீதிபதிளை நியமிப்பதற்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியும் ஒப்புதல் அளித்துள்ளார்.
உயர் நீதிமன்ற வழக்கறிஞர்களான வி.பாரதிதாசன், எஸ்.எஸ்.சுந்தர், எம்.வி.முரளிதரன், டி.கிருஷ்ணகுமார் மற்றும் சென்னை உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளர் பொன்.கலையரசன், சென்னை சிறு வழக்குகளுக்கான நீதிமன்ற முதன்மை நீதிபதியாக இருந்து கடந்தாண்டு ஓய்வுபெற்ற பி.கோகுல்தாஸ் ஆகியோர் தான் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள நீதிபதிகள் ஆவர்.
இந்த 6 பேரும் தங்களின் 62வது வயது வரை நீதிபதி பதவியில் இருப்பார்கள். கோகுல்தாஸ் மட்டும் தனது 60வது வயதில் உயர் நீதிமன்ற நீதிபதியாக பொறுப்பேற்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications