வெளிநாடு செல்ல குஷ்புவுக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை அனுமதி
ஆண்டிப்பட்டி நீதிமன்றத்தில் தேர்தல் விதிமீறல் வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் வெளிநாட்டுக்கு குடும்பத்தினருடன் சுற்றுலா செல்ல சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை நடிகை குஷ்புவுக்கு அனுமதி வழங்கியுள்ளது.
மதுரை: ஆண்டிப்பட்டி நீதிமன்றத்தில் தேர்தல் விதிமீறல் வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் வெளிநாட்டுக்கு குடும்பத்தினருடன் சுற்றுலா செல்ல சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை நடிகை குஷ்புவுக்கு அனுமதி வழங்கியுள்ளது.
திமுகவில் இருந்தபோது நடிகை குஷ்பு கடந்த 2011-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலை முன்னிட்டு ஆண்டிப்பட்டியில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது தேர்தல் விதிமுறையை மீறியதாக குஷ்பு மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு ஆண்டிப்பட்டி நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
இந்நிலையில், தனது பாஸ்போர்ட்டில் கூடுதல் பக்கங்களை இணைக்கக்கோரி குஷ்பு, பாஸ்போர்ட் அதிகாரியிடம் கோரிக்கை வைத்தார். ஆனால், வழக்கை காரணம் காட்டி, பாஸ்போர்ட்டில் கூடுதல் பக்கங்களை இணைக்க அதிகாரிகள் மறுத்துவிட்டனர்.
இதை எதிர்த்து குஷ்பு, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, குஷ்பு மீதான வழக்கு ஆண்டிப்பட்டி நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதாக பாஸ்போர்ட் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
குற்றவழக்குகளை காரணம் காட்டி பாஸ்போர்ட்டை புதுப்பிக்க மறுக்க முடியாது என்று தெரிவித்த உயர் நீதிமன்றம் அவரது பாஸ்போர்ட்டை புதுப்பிக்குமாறு சென்னை மண்டல பாஸ்போர்ட் அதிகாரி உத்தரவிட்டது. இதையடுத்து குடும்பத்தினருடன் குஷ்பு வெளிநாட்டுக்கு சுற்றுலா செல்ல திட்டமிட்டுள்ளார்.