கட்டாய ஹெல்மெட் சட்டத்தை முறையாக நடைமுறை படுத்தவில்லை.. தமிழக அரசு மீது ஹைகோர்ட் அதிருப்தி!
கட்டாய ஹெல்மெட் சட்டத்தை தமிழக அரசு முறையாக நடைமுறை படுத்தவில்லை என தமிழக அரசு மீது சென்னை உய்ரநீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.
சென்னை: கட்டாய ஹெல்மெட் சட்டத்தை தமிழக அரசு முறையாக நடைமுறை படுத்தவில்லை என தமிழக அரசு மீது சென்னை உய்ரநீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.
மோட்டார் வாகனச் சட்டத்தின்படி, இருசக்கர வாகனத்தை ஓட்டும் நபரும் பின்னால் அமர்ந்து செல்லும் நபரும் கட்டாயம் ஹெல்மெட் அணியும் சட்டத்தை நடைமுறை படுத்தக்கோரி தமிழக அரசுக்கு உத்தரவிட வலியுறுத்தி ராஜேந்திரன் என்பவர் பொதுநல வழக்கு தொடர்ந்தார்.
இதனை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் இருசக்கர வாகனத்தின் பின்னால் அமர்ந்திருப்பவரும் கட்டாயம் ஹெல்மெட் அணியும் சட்டத்தை நடைமுறைபடுத்தக்கோரி சென்னை உயர்நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டது.
மீண்டும் விசாரணை
இந்நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் ஹைகோர்ட் நீதிபதிகள் எஸ்.மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.
அரசுஅறிக்கை தாக்கல்
அப்போது, தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், மாவட்ட வாரியாக ஹெல்மெட் அணியாமல் சென்றவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் வசூலிக்கப்பட்ட அபராதம் ஆகியவை குறித்த அறிக்கையை தாக்கல் செய்தார்.
சீட் பெல்ட் அணிகிறார்களா?
இதையடுத்து, கட்டாய ஹெல்மெட் சட்டத்தை அரசு முறையாக நடைமுறைப்படுத்தவில்லை என நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர். மேலும், இருசக்கர வாகனங்களில் பயணிக்கும் போலீசார் ஹெல்மெட்டும், கார்களில் பயணிக்கும் காவல்துறை அதிகாரிகள் சீட் பெல்ட்டும் அணிகிறார்களா? என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், ஹெல்மெட் மற்றும் சீட் பெல்ட் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினால் மட்டும் போதாது என்று தெரிவித்தனர்.
நாளை தீர்ப்பு
காரில் செல்லும் அதிகாரிகள் கூட சீட் பெல்ட் அணிவது இல்லை என அதிருப்தி தெரிவித்தனர். மேலும், வழக்கின் மீதான தீர்ப்பு நாளை அறிவிக்கப்படும் எனக் கூறி, விசாரணையை ஒத்திவைத்தனர்.