அங்கீகரிக்கப்படாத வீட்டுமனை பதிவுகளுக்கு தடை.. ரத்து செய்ய ஐகோர்ட் மறுப்பு
அங்கீகரிக்கப்படாத வீட்டுமனைகளை பதிவு செய்ய விதிக்கப்பட்ட தடையை ரத்து செய்ய முடியாது என்று சென்னை ஐகோர்ட் கூறியுள்ளது.
சென்னை: அங்கீகாரம் இல்லாத வீட்டுமனை பதிவுகளுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க சென்னை ஐகோர்ட் மறுத்துள்ளது. அங்கீகரிக்கப்படாத வீட்டுமனை பதிவுகளுக்கு விதிக்கப்பட்ட தடை தொடரும் எனவும் அது தெரிவித்துள்ளது.
தமிழகம் முழுவதும் உள்ள விவசாய நிலங்கள் அங்கீகரிக்கப்படாத வீட்டுமனைகளாக மாற்றப்பட்டு விற்கப்பட்டு வருகின்றன. இதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் என்பவர் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல் அடங்கிய அமர்வு, அங்கீகாரமற்ற வீட்டுமனைகளை பத்திரப்பதிவு செய்ய இடைக்காலத் தடை விதித்து கடந்த செப்டம்பர் 9ம் தேதி உத்தர விட்டது.
இந்தத் தடை உத்தரவால் பத்திரப்பதிவு முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளதாகவும், ரியல் எஸ்டேட் தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பதாகவும் கூறி ரியல் எஸ்டேட் சங்கத்தினர் இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தனர்.
இந்தத் உத்தரவை ரத்து செய்ய முடியாது என்று ஏற்கனவே ஐகோர்ட் கூறியுள்ள நிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு சார்பில் அரசு வழக்கறிஞர் அய்யாத்துரை கோர்ட்டில் ஆஜரானர். தமிழக அரசு சார்பில் தயாரிக்கப்பட்ட பரிந்துரைகளை கோர்ட்டில் அவர் தாக்கல் செய்தார்.
பின்னர், விசாரணையின் முடிவில் அரசு அங்கீகாரம் இல்லாத நிலங்களை பதிவு செய்வதற்கான தடையை நீக்க முடியாது என்று கோர்ட் திட்டவட்டமாக கூறியது. இதனைத் தொடர்ந்து வழக்கு விசாரணை டிசம்பர் 5ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
தமிழக அரசின் சார்பில் கோர்ட்டில் கொடுக்கப்பட்டுள்ள பரிந்துரைகளில் எந்தெந்த நிலத்தை அரசு அங்கீகரிக்க தயாராக உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை ஆய்வு செய்த பின்னர் கோர்ட்டு இந்த விவகாரத்தில் ஒரு முடிவுக்கு வரும் என்று தெரிகிறது.