சென்னைக்கும் வருதப்போய் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு.. 2018ம் ஆண்டு.. ஜனவரியில்!
சென்னையில் அடுத்த ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்படும் என்று சென்னை ஜல்லிக்கட்டு பேரவை அறிவித்துள்ளது.
சென்னை : தென் மாவட்டங்களில் மட்டுமே நடத்தப்பட்டு வந்த ஜல்லிக்கட்டு போட்டிகள் அடுத்த ஆண்டு சென்னையில் நடைபெற உள்ளது என்பது சென்னைவாசிகளுக்கு மகிழ்ச்சியளிக்கும் விஷயம் எனலாம்.
ஜல்லிக்கட்டு என்றதும் அனைவருக்கும் அலங்காநல்லூர், பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டிகள் தான் நினைவுக்கு வரும். அந்த மண் சார்ந்தவர்கள் மற்றும், சுற்று வட்டார கிராம மக்கள் மட்டுமே இதுவரை ஜல்லிக்கட்டு போட்டியை நேரில் பார்த்திருப்பார்கள். மெரினா போராட்டத்தில் ஜல்லிக்கட்டு வேண்டும் என்று வலியுறுத்தி நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்றவர்களில் பலர் ஜல்லிக்கட்டு போட்டியை இதுவரை டிவிகளில் மட்டுமே பார்த்திருப்பார்கள்.
சென்னையில், ஜனவரியில் நடந்த ஜல்லிக்கட்டு உரிமைக்கான போராட்டம், புரட்சியாக மாறியது. ஜல்லிக் கட்டுக்கான தடை நீங்கியதற்கு, சென்னை மக்களின் போராட்டம் தான் விதையாக அமைந்தது. ஆனால், சென்னை மக்கள் பலருக்கு, ஜல்லிக்கட்டை நேரடியாக காணும் வாய்ப்பு கிடைக்கவில்லை.
'சென்னையில் ஜல்லிக்கட்டு'
ஜல்லிக்கட்டு போட்டியை பார்க்க வேண்டுமெனில் தென் மாவட்டங்களுக்குத் தான் செல்ல வேண்டும் என்று இல்லை சென்னை சிட்டியிலும் பார்க்கலாம் என்று சென்னை ஜல்லிக்கட்டு பேரவை அறிவித்துள்ளது. அந்தப் பேரவை நிர்வாகிகளான ராஜசேகர், அமர்பிரசாத் ஹரி ஆகியோர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.
அடுத்த ஆண்டு கோவளத்தில் நடக்கிறது
இதன்படி 2018 ஜனவரி 6ம் தேதி கோவளம் அருகே, நுாறு ஏக்கர் பரப்பளவில், தனியார் மைதானத்தில், 'சென்னையில் ஜல்லிக்கட்டு' எனும் நிகழ்ச்சியை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகை துவங்கியவுடன், தமிழகத்தின் பல பகுதிகளில், ஜல்லிக்கட்டு உள்ளிட்ட, காளைகளுடனான விளையாட்டுகள் துவங்கிவிடும் என்பதால், அதற்கு முன்னதாகவே, இந்த போட்டி, சென்னையில் நடத்தப்பட உள்ளது.
ரூ.30 லட்சம் பரிசு
தமிழக ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்ற சிறப்புமிக்க, 300 காளைகள் சென்னை ஜல்லிக்கட்டில் பங்கேற்க உள்ளன. 250 முதல், 300 சிறந்த வீரர்களும் பங்கேற்பர். போட்டியில் வெற்றி பெறும் வீரர்களுக்கு, ரூ. 30 லட்சம் மதிப்புள்ள பரிசுகள் வழங்கப்படும். போட்டியை, தமிழக முதல்வர் தொடங்கி வைக்க மத்திய அமைச்சர்கள் பங்கேற்க உள்ளனர்.
இலவச பாஸ்
உச்சநீதிமன்ற உத்தரவு, தமிழக ஜல்லிக்கட்டு சட்டம் ஆகியவற்றை காக்கும் நோக்கில், போட்டியை காண, நிபந்தனைகளுடன் இலவச பாஸ் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. போட்டியில் அசம்பாவிதம் ஏதும் நிகழாமல் இருக்க, விளையாட்டுத் துறை சார்ந்த வல்லுனர்கள் ஒருங்கிணைப்புப் பணியில் ஈடுபட உள்ளனர்.