சென்னை ரெய்டு.. 70 கோடிக்கு ரூ.2000 நோட்டுக்கள்.. அதிர்ந்து போன ஐடி அதிகாரிகள்
சென்னையில் ஐடி அதிகாரிகள் நடத்திய ரெய்டில் தொழிலதிபர் ஒருவரிடமிருந்து 70 கோடிக்கு 2000 ரூபாய் நோட்டுக்கள் சிக்கியுள்ளன.
சென்னை: சென்னை அண்ணா நகர், திநகர் உள்ளிட்ட 8 இடங்களில் சோதனை நடந்தது . தொழிலதிபர் சேகர் ரெட்டி , சீனிவாச ரெட்டி, பிரேம் ஆகியோர் வீட்டில் சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையில் ரூ.90 கோடி மற்றும் 100 கிலோ தங்கம் ஆகியவற்றை பறிமுதல் செய்ததாக தகவல் வெளியுள்ளன. ரூ. 90 கோடியில் ரூ.70 கோடி புதிய நோட்டுகள் ஆகும்.
ஐடி ரெய்டில் சேகர் ரெட்டி வீட்டில் ரூ.70 கோடிக்கு ரூ2,000 நோட்டுகள் பதுக்கி வைத்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுதான் இதில் உச்சகட்ட அதிர்ச்சியாகும்.
ஒவ்வொரு சாமானிய மனிதனும் தான் நேர்மையாக சம்பாதித்த பணத்தை வங்கியில் எடுக்க நீண்ட கியூவில் காத்திருக்கிறான். அதிலும் குறிப்பிட்ட அளவே வழங்கப்படுகிறது. ஆனால் கருப்பு பண முதலைகள் வங்கி மேனேஜர்களை கைக்குள் போட்டுக் கொண்டு புது நோட்டுக்களை வாங்கி குவித்து, கருப்பு பணத்தையெல்லாம் வெள்ளையாக்கி வைத்துள்ளார்கள். இதனால்தான் மக்களுக்கு போதிய பணம் சென்று சேரவில்லை.
நாட்டில் இதுபோன்ற அதிகாரிகள் இருக்கும்போது, அரசு கொண்டுவரும் திட்டங்கள் ஓட்டை பானைக்குள் விடும் நீரை போல ஒழுகி யாருக்கும் பலனின்றி போய்விடும் என்பதே தற்போது யதார்த்தமாக மாறியுள்ளது. கர்நாடகாவில் முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டி இதேபோல மைசூர் எஸ்.பி.ஐ வங்கி அதிகாரிகள் மூலம் கறுப்பை வெள்ளையாக்கியதாக சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது.
இதுபோல நாடு முழுக்க வங்கி மேனேஜர்களின் பண பரிவர்த்தனையை உளவுத்துறை மூலமும், சிபிஐ மூலமும் கடுமையாக கண்காணித்தால், கருப்பு பண முதலைகளுக்கு உடன்படுவோரை தடுக்க முடியும்.