சென்னை கமிஷனர் அலுவலகத்தில் பத்திரிகையாளர்கள் திடீர் போராட்டம்!
பத்திரிகையாளர் சதாசிவம் தாக்கப்பட்டதைக் கண்டித்து சென்னை கமிஷனர் அலுவலகத்தில் பத்திரிகையாளர்கள் இன்று போராட்டம் நடத்தினர்.
சென்னை: தினமலர் வீடியோகிராபர் சதாசிவத்தை போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் தாக்கியதைக் கண்டித்து சென்னை கமிஷனர் அலுவலகத்தில் 100க்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்கள் திடீர் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னையில் பத்திரிகையாளர்கள் மீது போலீசார் தாக்குதல் நடத்துவது தொடர் கதையாகி வருகிறது. கடந்த மாதம் தீக்கதிர் நிருபர் ஜாபர் உசேன் போலீஸ் அதிகாரிகளால் தாக்கப்பட்டார். இதற்கு எதிராக பத்திரிகையாளர்கள் போராட்டம் நடத்தினர்.

இந்த நிலையில் தினமலர் வீடியோகிராபர் சதாசிவத்தை பாலமுருகன் என்ற சப் இன்ஸ்பெக்டர் தாக்கியிருக்கிறார். தொடரும் இத்தகைய தாக்குதல்களுக்கு நீதி கோரி சென்னை கமிஷனர் அலுவலகத்தில் 100க்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பின் போலீஸ் உயர் அதிகாரிகள், பத்திரிகையாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து போராட்டத்தை பத்திரிகையாளர்கள் கைவிட்டனர்.












Click it and Unblock the Notifications