சென்னை சட்டக் கல்லூரி விடுமுறை 18ம் தேதி வரை நீட்டிப்பு– மாணவர்கள் போராட்டம் தொடர்வதால்
சென்னை: சென்னை அம்பேத்கார் சட்டக் கல்லூரியினை இடம் மாற்றம் செய்யக் கூடாது என்ற கோரிக்கையின் அடிப்படையில் மாணவர்களின் உள்ளிருப்பு போராட்டம் தொடர்வதால், இன்று திறக்கப்பட இருந்த கல்லூரிக்கு வரும் 18 ஆம் தேதி வரை விடுமுறை நீட்டிக்கப்பட்டுள்ளது.
மிகவும் பழமை வாய்ந்த கட்டடத்தில் இயங்கி வரும் சென்னை டாக்டர் அம்பேத்கார் சட்டக் கல்லூரியை இடமாற்றம் செய்யக் கூடாது என வலியுறுத்தி கடந்த 4 ஆம் தேதி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு சென்னையை ஸ்தம்பிக்க வைத்த மாணவர்கள், பின்னர் தொடர் உள்ளிருப்புப் போராட்டத்தை தொடங்கினர்.
சட்டக் கல்லூரி இடமாற்றம் செய்வது தொடர்பான வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் சட்டக் கல்லூரி வளாக கட்டடம் பலவீனமாக இருப்பதால், கல்லூரியை இடமாற்றம் செய்ய வேண்டியது அவசியம் என தெரிவித்தது.
மாணவர்களின் போராட்டம் காரணமாக ஒருவார விடுமுறைக்குப் பின்னர் சட்டக் கல்லூரி இன்று மீண்டும் திறக்கப்பட இருந்த நிலையில் கல்லூரிக்கு செல்லாமல் உள்ளிருப்புப் போராட்டத்தை தொடரப்போவதாக மாணவர்கள் தெரிவித்ததை அடுத்து வருகின்ற 18 ஆம் தேதி வரை விடுமுறை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனை அக்கல்லூரியின் முதல்வர் முருகதாஸ் தெரிவித்துள்ளார்.
மாணவர்களுக்கு ஆதரவாக உளுந்தூர்பேட்டையைச் சேர்ந்த வழக்கறிஞர் சந்திரசேகர் என்பவரும் காலவரையற்ற உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.