சென்னை-மதுரை துரந்தோ எக்ஸ்பிரஸ் வரும் ஜனவரி முதல் சேலத்திலும் நிற்கும் - தெற்கு ரயில்வே
சென்னை: சென்னையிலிருந்து மதுரை வரை செல்லும் துரந்தோ வாரம் இருமுறை ரயிலானது ஜனவரி மாதம் முதல் சேலத்திலும் நின்று செல்லும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இதுகுறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "சென்னை சென்ட்ரலில் இருந்து திங்கட்கிழமை மற்றும் புதன்கிழமைகளில் மதுரை நோக்கி சென்னை சென்ட்ரல்-மதுரை துரந்தோ வாரம் இருமுறை எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டு வருகிறது.
இந்த ரயில் வருகிற ஜனவரி (2016) மாதம் 4 ஆம் தேதியில் இருந்து சேலம் ரயில் நிலையத்தில் நின்று செல்லும். சென்னையில் இருந்து இரவு 10.30 மணிக்கு இயக்கப்படும் இந்த ரயில் அதிகாலை 2.55 மணிக்கு சேலத்துக்கு வந்து, அதிகாலை 3.05 மணிக்கு மதுரை நோக்கி புறப்படும்.
அதேபோல மறுமார்க்கமாக மதுரையில் இருந்து செவ்வாய்க்கிழமை மற்றும் வியாழக்கிழமைகளில் சென்னை நோக்கி இயக்கப்படும் மதுரை-சென்னை சென்ட்ரல் துரந்தோ வாரம் இருமுறை எக்ஸ்பிரஸ் (22206) ரயில் ஜனவரி 5 ஆம் தேதியில் இருந்து சேலம் ரயில் நிலையத்தில் நின்று செல்கிறது.
மதுரையில் இருந்து இரவு 10.45 மணிக்கு புறப்படும் இந்த ரயில் அதிகாலை 2.20 மணிக்கு சேலத்துக்கு வந்து, அங்கிருந்து 2.30 மணிக்கு சென்னை நோக்கி புறப்படும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.