மனைவி, 2 குழந்தைகளை கொன்று தொழிலதிபர் தற்கொலை: சென்னையில் பயங்கரம்
சென்னை: கடன் பிரச்சினையால் மன உளைச்சலுக்கு ஆளான தொழிலதிபர் ஒருவர், தனது மனைவி, இரண்டு பிள்ளைகளையும் கழுத்தை அறுத்து கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கொத்தவால் சாவடியில் வசித்து வருபவர் தேவேந்திர குமார், 45. இவருக்கு தீஷியா, 38, என்ற மனைவியும், ஷெர்பி, 15 என்ற மகளும், மானஷ், 12 என்ற மகனும் இருந்தனர். இவர்களுடன் தேவேந்திரகுமாரின் தாய் ஷோபாதேவியும், 60 வசித்து வந்தார்.

தென்னாப்ரிக்காவில் வேலை செய்துவந்த தேவேந்திர குமார் சில மாதங்களுக்கு முன்பு சென்னை திரும்பி ஷேர் மார்க்கெட் தொழிலில் ஈடுபட்டு வந்தார். இதில் சில நேரங்கள் நல்ல வருவாய் கிடைத்துள்ளது. திடீரென்று பலத்த நஷ்டமும் ஏற்படவே, கடுமையான மன உளைச்சளுக்கு ஆளானார் தேவேந்திர குமார்.
இந்த நிலையில், நேற்று இரவு குடும்பத்தோடு சினிமாவுக்குப் போய்விட்டு, இரவு உணவை வெளியில் சாப்பிட்டுவிட்டு மகிழ்ச்சியாக வீட்டுக்குத் திரும்பினர்.
மகனும், மகளும் ஒரு அறையிலும், தயார் வேறு ஒரு அறையிலும் உறங்கிக் கொண்டிருக்க, மனைவியுடன் படுத்திருந்த தேவேந்திர குமார் திடீரென ஆவேசம் வந்தவரைப் போல அங்கும் இங்கும் அலைந்தார்
திடீரென தனது கையில் வைத்திருந்த கத்தியால் தேவேந்திரகுமார் கையில் கைத்தியுடன், மகன் மற்றும் மகளின் கழுத்தை அறுத்து கொடூரமாகக் கொலை செய்தார். இதனைப் பார்த்துக் கதறிய தேவேந்திர குமாரின் தாயாரை அவர் தள்ளிவிட்டார், அதில் அவர் நிலைகுலைந்து விழுந்தார்.
தாயாரின் கண் முன்னே, தேவேந்திர குமார் தனது மனைவியின் கழுத்தையும் அறுத்துக் கொன்றுவிட்டு, தானும் கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொண்டார். இதைப் பார்த்து தாய் ஷோபாதேவி கத்தி கூச்சலிடவே அவரது குரலைக் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். ஆனால், அதற்குள் 4 உயிர்களும் பறிபோய்விட்டன.
சம்பவத்தைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் கொத்தவால் சாவடி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், 4 உடல்களையும் கைப்பற்றி சென்னை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
கொலைக்கு முன்பாகவே, தேவேந்திர குமார், எனது குடும்பத்தை நானே கொல்லப்போகிறேன். இதற்கு நானே பொறுப்பு. வேறு யாரும் காரணம் இல்லை என்று எழுதி வைத்துள்ளார். கூடவே, 3 செல்போன் எண்களை எழுதி, இவர்களுக்கு செய்தியைக் கூறிவிடுங்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
ஒரு துண்டு சீட்டில் தெளிவாக 10.3.2016 என்று இன்றைய தேதியை போட்டு ஆங்கிலத்தில் இக்கடிதத்தை எழுதி உள்ள தேவேந்திரகுமார், அதன் முடிவில் தனது கையெழுத்தையும் போட்டுள்ளார்.
தேவேந்திரகுமார் கொலைக்கு பயன்படுத்திய கத்தி, புத்தம் புதிதாக இருந்தது. இதற்காகவே அவர் திட்டமிட்டு சில நாட்களுக்கு முன்னரே கத்தியை வாங்கி வைத்திருந்தது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
தேவேந்திர குமாரின் சொந்த ஊர் உத்தரபிரதேச மாநிலம் ஆகும். இவரது சகோதரர்கள் மற்றும் உறவினர்கள் பலரும் வெளிநாட்டிலேயே வேலை செய்து வருகிறார்கள். கடன் பிரச்சினையால், 4 உயிர்கள் பலியான சம்பவம் கொத்தவால்சாவடி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications