கடலில் கச்சா எண்ணை கலப்பு.. நாளைக்குள் பதில் தேவை.. மத்திய அரசுக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு
கடலில் கச்சா எண்ணை கலந்தது பற்றி, 24 மணி நேரத்திற்குள்ளாக மத்திய அரசு உட்பட நோட்டீஸ் பெறும் அனைத்து தரப்பும் பதில் அளிக்க வேண்டும் என்று தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை: சென்னை கடலில் எண்ணை கசிவு ஏற்பட்டது தொடர்பாக, மத்திய அரசுக்கு பசுமை தீர்ப்பாயம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
சென்னை எண்ணூர் துறைமுகம் அருகே கடலில் இரு கப்பல்கள் மோதிக்கொண்ட விபத்தால் அதிலிருந்த கச்சா எண்ணை கடலில் கொட்டியது. எண்ணூர் முதல் திருவான்மியூர் வரையிலான கடல் பரப்பில் எண்ணை கலப்பு ஏற்பட்டு கடல்வாழ் உயிர்வாழினங்கள் அழிவடைந்தன.
10 நாட்களாகியும் முழுக்க எண்ணை கழிவுகளை அகற்ற முடியாமல் அதிகாரிகள் திணறி வருகிறார்கள். இதனால் மீனவர்கள் வாழ்வாதம் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சோமசுந்தரம் என்பவர் சென்னை பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தார். எண்ணை கசிவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்குவது மற்றும் உரிய விசாரணை நடத்த வேண்டும் என்பது இவரது கோரிக்கையாகும்.
இதுகுறித்து விசாரித்த பசுமை தீர்ப்பாயம் மத்திய அரசுக்கு விளக்கம் கேட்டு, நோட்டீஸ் அனுப்பியுள்ளது. தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரியமும் பதிலளிக்க வேண்டும் என்று தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. கப்பல்துறை இயக்குநரகத்துக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது. நாளை இவ்வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும்.
அதற்குள்ளாக அதாவது, 24 மணி நேரத்திற்குள்ளாக மத்திய அரசு உட்பட நோட்டீஸ் பெறும் அனைத்து தரப்பும் பதில் அளிக்க வேண்டும் என்று தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.