காவிரியை நம்பி சென்னை.. மேட்டூரைத் திறந்து வீராணத்தை நிரப்பி சென்னைக்கு அனுப்ப திட்டம்
சென்னை: சென்னையில் கடந்த சில நாட்களாக மாலையில் லேசானது முதல் கனமழை வரை பெய்து வருகிறது. ஆனபோதும், கோடையில் காய்ந்து போன சென்னையின் குடிநீர் தேவைக்கு இந்த மழை போதுமானதாக இல்லை. எனவே மேட்டூர் அணை திறக்கப்படுவதன் மூலம் வீராணம் ஏரியில் தண்ணீர் நிரம்பி, சென்னையின் குடிநீர் தேவையை சமாளிக்க உதவும் என்று அதிகாரிகள் கருதுகின்றனர்.
கடந்த 15 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கடுமையான தண்ணீர் தட்டுப்பாட்டை நோக்கி சென்னை சென்று கொண்டிருக்கிறது. சென்னையில் கடந்த 2003 மற்றும் 2004ம் ஆண்டுகளில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டது.
சென்னையில் நீர்த்தேக்கங்கள் கிட்டத்தட்ட வறண்டு விட்டடதால், திருப்போரூர், பஞ்செட்டி ஆகிய பகுதிகளில் இருந்து லாரிகள் மூலம் தண்ணீர் கொண்டு வரப்பட்டது. பின்னர் அதுவும் போதாததால், சுமார் 150 கி.மீ. தொலைவில் இருந்து தினமும் 100 மில்லியன் லிட்டர் நீர் வரை பெறப்பட்டது.

தண்ணீர் தட்டுப்பாடு...
தற்போது சென்னையில் நிலவும் சூழ்நிலையைப் பார்த்தால், மீண்டும் அதே போன்ற தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் நிலை காணப்படுகிறது. சென்னைக்கு குடிநீர் வழங்கும் நீர்நிலைகளில் தற்போது 922 மில்லியன் கனஅடி மட்டுமே தண்ணீர் உள்ளது. இது மிகவும் குறைவான அளவாகும்.

தேவையில் பாதி...
சுமார் 70 லட்சம் மக்கள்தொகை கொண்ட சென்னைக்கு, 900 முதல் 1000 மில்லியன் லிட்டர் குடிநீர் தேவை. ஆனால், சென்னை குடிநீர் வாரியம் இதுவரை அதிகபட்சமாக ஒரு நாளுக்கு 550 மில்லியன் லிட்டர், அதாவது தேவையில் சுமார் பாதி அளவு மட்டுமே வழங்கி வந்துள்ளது.

கடல் நீர் குடிநீராகிறது...
இதில் 200 மில்லியன் லிட்டர் தண்ணீர் கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தின் மூலம் கிடைக்கிறது. திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள மீஞ்சூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சுமார் 100 மில்லியன் லிட்டர் கிணற்று நீர் எடுக்கப்பட்டு, அவை லாரிகளின் மூலம் சென்னை மக்களுக்கு வினியோகிக்கப்படுகிறது.

ஏரிகளை தூர் வார திட்டம்...
சென்னை பெருநகர எல்லைக்குட்பட்ட 280 ஏரிகளில் தூர் வாரவும், போர்வெல் மூலம் குடிநீர் எடுக்கவும் அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். இங்கிருந்தும் குடிநீர் கொண்டு வந்து விநியோகம் செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது.

சிட்லபாக்கம் ஏரி...
மேலும், வேளச்சேரி, பல்லாவரம், சிட்லபாக்கம் ஏரிகளை முக்கிய குடிநீர் ஆதாரமாக மாற்றும் திட்டமும் அதிகாரிகளிடம் உள்ளதாம்.

வீராணம் ஏரி...
வீராணம் ஏரியில் இருந்து 200 மில்லியன் லிட்டர் வரை தண்ணீர் கிடைக்கிறது. ஆனால், தற்போது வீராணம் ஏரியிலும் தண்ணீரின் அளவு குறைவாகவே உள்ளது.

மேட்டூர் அணை...
இதனைக் கருத்தில் கொண்டு வரும் 27ம் தேதி மேட்டூர் அணையை திறக்க முடிவு செய்யப்படுள்ளது. இதன் மூலம் வீராணம் ஏரி நிரம்பி, சென்னையின் குடிநீர் தட்டுபாட்டை சமாளிக்க உதவும் என்று அதிகாரிகள் நம்புகின்றனர்.

ஆடிப்பெருக்கு...
மேட்டூர் அணைத் திறப்பின் மூலம் ஆடிப் பெருக்கை கொண்டாடவும் மக்களுக்கு வாய்ப்பு ஏற்படும். ஆகஸ்ட் 3ம் தேதி ஆடிப்பெருக்கு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications