சிறுவர் சீர்திருத்தப்பள்ளியிலிருந்து தப்பிய 4 சிறுவர்கள் கைது.. திரையங்கில் சுற்றி வளைத்தது போலீஸ்
சென்னை : கெல்லீஸில் உள்ள அரசு சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் இருந்து தப்பியோடிய சிறுவர்களில் மேலும் 4 பேரை போலீசார் திரையரங்கில் சுற்றி வளைத்து கைது செய்தனர்.
குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக காவல்துறையினரால் கைது செய்யப்படும் 18 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் சென்னை புரசைவாக்கம் கெல்லீஸில் உள்ள அரசு சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் அடைத்து வைக்கப்படுகிறார்கள்.

இந்தச் சீர்திருத்தப் பள்ளியில் தரைத் தளத்தில் 23 சிறுவர்களும், முதல் தளத்தில் 20 சிறுவர்களும் வைக்கப்படட்டிருந்தனர். இந்த நிலையில் சீர்திருத்தப்பள்ளியின் வார்டன் விஜயக்குமார் கடந்த 17-ஆம் தேதி பணியில் இருக்கும்போது, அவரைத் தாக்கி 14 சிறுவர்கள் தப்பியோடினர்.
இந்தச் சம்பவம் குறித்து தலைமைச் செயலக காலனி போலீஸார் வழக்குப் பதிவு செய்து, தப்பியோடிய சிறுவர்களை தேடி வந்தனர். இதில் 5 சிறுவர்களை போலீஸார் உடனடியாக கைது செய்தனர்.
எஞ்சிய சிறுவர்களைத் தேடி வந்தனர். இதற்கிடையே அசோக்நகரில் உள்ள ஒரு திரையரங்கில் 4 சிறுவர்கள் சந்தேகத்துக்குரிய வகையில் இருப்பதாக போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அந்தத் தகவலின் அடிப்படையில் போலீசார், அங்கு சென்று அந்த 4 சிறுவர்களை சுற்றி வளைத்துப் பிடித்து விசாரித்தனர்.
விசாரணையில் அவர்கள் 4 பேரும் கெல்லீஸ் சிறுவர் இல்லத்தில் இருந்து தப்பியோடியவர்கள் என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீஸார் அவர்கள் 4 பேரையும் கைது செய்தனர்.
மேலும் தலைமறைவாக உள்ள 5 சிறுவர்களை பிடிக்கும் பணியில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications