நடு வழியில் நின்ற ரயில்... இறங்க முடியாமல் தவித்த கர்ப்பிணி.. முதுகை படிக்கட்டாக்கி உதவிய போலீஸ்!
கர்ப்பிணி பெண் ரயிலிலிருந்து இறங்க 2 போலீசார் உதவி செய்தனர்.
Recommended Video

சென்னை: சில நேரங்களில் தமிழக போலீசார் செய்யும் செயல்கள் நம்மை திக்குமுக்காட செய்துவிடகிறது. திடீரென்று உணர்ச்சிப் பிழம்பான காரியங்களை செய்துவிட்டு, "காவல்துறை உங்கள் நண்பனேதான்" என்பதை அடிக்கடி நமக்கு பறைசாற்றி வருகின்றனர். அதற்கு ஒரு உதாரணம்தான் இது.
நேற்று தாம்பரத்தில் இருந்து கடற்கரை நோக்கி மின்சார ரயில் ஒன்று வந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென்று சிக்னல் கோளாறு ஏற்பட்டுவிட்டது. அதனால், அந்த ரயிலானது, கோட்டை மற்றும் பூங்கா ரயில் நிலையங்களின் இடையே நின்றுவிட்டது. பாதி வழியில் ரயில் நின்றுவிட்டதால், பெரும்பாலான பயணிகளுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. அதனால் ரயிலிலிருந்து இறங்கி நடந்து சென்றுவிடலாம் என்று ஒவ்வொருவராக இறங்க தொடங்கினர்.

அப்போது அமுதா என்ற கர்ப்பிணி பெண்ணும் கீழே இறங்க முயற்சித்தார். நடைமேடை இல்லை என்பதாலும், படிக்கட்டுகள் உயரமாக இருந்ததாலும் அமுதாவால் இறங்க முடியவில்லை. வெகுநேரம் எப்படி ரயிலை விட்டு இறங்குவது என தெரியாமல் தவித்தார். இப்படியே 2 மணி நேரம் ஆகிவிட்டது. அமுதாவால் கடைசிவரை கீழே இறங்கவே முடியவில்லை. அப்போது போலீசார் இரண்டு பேர் அங்கு வந்தனர். அவர்களது பெயர் தனசேகர், மணிகண்டன். அமுதா கீழே இறங்க முடியாமல் தடுமாறி கொண்டிருப்பதை கண்ட அவர்கள், திடீரென ரயிலின் நுழைவு வாயிலில் படிக்கட்டு போல குனிந்து நின்றனர்.
இப்போது அமுதாவை தங்கள் மீது கால்வைத்து கீழே இறங்குமாறு சொன்னார்கள். அமுதாவும் ஒரு சிறு தயக்கத்திற்கு பின்னர், தன் கால்களை போலீசார் இருவரின் முதுகுகளின் மீது வைத்து கீழே இறங்கினார். இதேபோல அங்கு கீழே இறங்க முடியாமல் தவித்த வயதானவர்களுக்கும் இதேபோல படிக்கட்டு போல குனிந்து நின்றனர் இரு போலீசாரும்.
போலீசாரின் இந்த மனிதநேய மிக்க செயலை அங்குள்ளவர்கள் மட்டுமல்லாமல் அனைவருமே பாராட்டி வருகிறார்கள். புல்லரிக்க வைத்த அந்த இரண்டு போலீசாருக்கும் பெரிய சல்யூட் ஒன்று நாம் அடித்தே ஆக வேண்டும்!












Click it and Unblock the Notifications