ஆதார் அட்டை கேட்டு... சென்னை சைதாப்பேட்டையில் மக்கள் சாலை மறியல்!
சென்னை: ஆதார் அட்டை வழங்க வலியுறுத்தி சென்னையில் பொது மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
மானியம் பெறுவது உள்ளிட்ட பல அரசு உதவிகளைப் பெறுவதற்கு ஆதார் அட்டை முக்கிய ஆவணமாகக் கருதப்படுகிறது. எனவே, ஆதார் அட்டையைப் பெற மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். அரசும் அனைவருக்கும் ஆதார் அட்டை கிடைக்க நடவடிக்கை எடுத்து வருகிறது.
தற்போது காஸ் சிலிண்டர் மானிய விவகாரத்திலும் பல இடங்களில் ஆதார் அட்டை வேண்டும் என்று வங்கிகள் வலியுறுத்துவதாக புகார்கள் கிளம்பியுள்ளன. இதனால் மக்கள் ஆதார் அட்டை பெற மும்முரமாகியுள்ளனர்.
இந்நிலையில், ஆதார் அட்டை கிடைக்கப் பெறாத சென்னை, சைதாப்பேட்டை பகுதி மக்கள் ஜோன்ஸ் சாலை, கடும்பாடி அம்மன் கோவில் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
ஆதார் அட்டை கோரி சென்னையில் மக்கள் மறியலில் குதித்தது இதுவே முதல் முறை என்று கூறப்படுகிறது.