மக்கள் களத்தில் இறங்கி வேலை செய்தால் மட்டுமே.. தொற்று நோய்களில் இருந்து தப்பிக்கலாம்- கார்த்தி
சென்னை: "மக்கள் களத்தில் இறங்கி வேலை செய்தால் மட்டுமே தொற்று நோய் அபாயங்களில் இருந்து தப்பிக்க முடியும்" என்று நடிகர் கார்த்தி கூறியிருக்கிறார்.
சென்னை மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நடிகர் சங்கமும் களத்தில் இறங்கி தேவைப்படும் உதவிகளை செய்து வருகிறது.
பேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ் ஆப் போன்ற சமூக வலைதளங்கள் மூலம் உதவிகளை ஒருங்கிணைப்பது, உதவி தேவைப்படுவோருக்கு அவற்றை கிடைக்கச் செய்வது போன்ற பணிகளில் நடிகர் சங்கத்தினர் ஈடுபட்டு வருகின்றனர்.

சேத்துப்பட்டு
சென்னை சேத்துப்பட்டு பகுதியில் உள்ள லேடி ஆண்டாள் பள்ளியில் தன்னார்வலர்கள் அனுப்பி வைக்கும் உணவுப் பொருட்களைப் பிரித்து அனுப்பி வைத்து வருகின்றனர். மக்களுக்குத் தேவைப்படும் பால், பிரட், பிஸ்கட் போன்றவற்றை நடிகர் கார்த்தி மற்ற நடிக, நடிகையர் மற்றும் தன்னார்வலர்களுடன் இணைந்து உதவி தேவைப்படும் இடங்களுக்கு அனுப்பி வைத்து வருகிறார்.

மக்களின் தேவை மாறுகிறது
நடிகர் கார்த்தி பாதிக்கப்பட்ட மக்களின் நிலை குறித்து கூறும்போது "தண்ணீரின் அளவு குறைய குறைய மக்களின் தேவை மாறிக் கொண்டேயிருக்கிறது, அதற்கேற்றார்போல நாங்கள் வேலை செய்து கொண்டிருக்கிறோம். நானும் விஷாலும் வட சென்னைக்கு சென்று அங்கிருக்கும் நிலைமையை அறிந்து அவர்களின் தேவை என்ன என்று தெரிந்து கொண்டு அதற்கேற்ற விதத்தில் நிவாரண பொருட்களை அனுப்பிக் கொண்டிருக்கிறோம்.காவல் துறையும் எங்களுக்கு உதவி செய்து கொண்டிருக்கிறார்கள்.

வருத்தம்
இன்னும் பல இடங்களில் தண்ணீர் வற்றாத நிலையில் அங்கிருக்கும் பெரும்பாலான குழந்தைகள், பெண்கள் மற்றும் முதியோர்கள் அவதிப்பட்டுக் கொண்டிருப்பது பெரிய வருத்தத்தை தருகிறது.

தடுப்பூசி அவசியம்
பொதுமக்கள் தற்போது பல்வேறு தொற்று நோய்களுக்கு ஆளாகும் நிலைக்கு தள்ளப் பட்டிருக்கிறார்கள். உடனே பாதிக்கப்பட்ட பகுதியில் இருக்கும் மக்கள் அனைவரும் அருகில் இருக்கும் மருத்துவ முகாமிற்கு சென்று முன் எச்சரிக்கை ஊசியை போட்டுக் கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறோம்.

அரிசி, பருப்பு முக்கியம்
முழுவதுமாக வெள்ளம் வடிந்தபின் மக்களுக்கு தேவையான அரிசி, பருப்பு, உப்பு, மிளகாய், துணிகள் போன்ற பொருட்கள்தான் மிக மிக முக்கியமானது, பாதிக்கப்பட்டவர்களை சகஜ நிலைக்கு கொண்டுவர இதுதான் அடுத்து அதிகமாக தேவைப்படும் என்பதால் தற்போது அதனை முழு வீச்சில் பேக் செய்து கொண்டிருக்கிறோம்.

மக்களும் முன் வர வேண்டும்
மக்கள் அனைவரும் களத்தில் இறங்கி வெள்ளம் வடிந்த பகுதிகளில் இருக்கும் அசுத்தங்கள் மற்றும் கழிவுகளை சுத்தம் செய்தால் மட்டுமே விரைவில் பரவயிருக்கும் நோய்களிலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள முடியும். மக்கள் அனைவரும் தயவு செய்து அவரவர் தெருவை சுத்தம் செய்தாக வேண்டும். ஏனெனில் அரசாங்கத்தால் அனைத்து இடங்களிலும் விரைவாக சுத்தம் செய்ய முடியுமா என்பது சந்தேகமே.
|
பணம் வேண்டாம்
வெள்ள நிவாரணத்துக்கு உதவி செய்ய நினைப்பவர்கள் தயவு செய்து பணமாக தர வேண்டாம். பொருட்களாக கொடுத்தால் அனைத்து இடங்களுக்கு கொண்டு சேர்க்க உதவியாக இருக்கும்" இவ்வாறு நடிகர் கார்த்தி தெரிவித்து தெரிவித்து இருக்கிறார்.
சென்னை மக்களுக்கு உதவ நினைப்பவர்கள் மக்களுக்குத் தேவைப்படும் அத்தியாவசியப் பொருட்களை கொடுத்து உதவலாமே!












Click it and Unblock the Notifications