கனமழையால் தனி தீவானது சென்னை: தகவல் தொடர்பு, போக்குவரத்து துண்டிப்பு
சென்னை: கடந்த 24 மணிநேரத்திற்கும் மேலாக பெய்து வரும் கனமழையால் சென்னை மாநகரமே ஸ்தம்பித்துள்ளது. தகவல் தொடர்பு சாதனங்கள், போக்குவரத்து வசதிகள் முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளதால், தனித்தீவாக மாறியுள்ளது . மின்சார வசதியும் நிறுத்தப்பட்டுள்ளதால் எவ்வித உதவியும் கிடைக்காமல் மக்கள் திண்டாடி வருகின்றனர். நகரமே ஸ்தம்பித்துள்ளது.
சென்னையில் காலை முதல் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக சாலைகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. சென்னை கிண்டி கத்திப்பாரா மேம்பாலத்திலிருந்து போரூர் செல்லும் வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன. போரூர்- வடபழநி சாலையில் 2 அடிக்கு மேல் தண்ணீர் தேங்கியுள்ளது. நுங்கம் பாக்கம், வள்ளுவர்கோட்டம், அமைந்தகரை சாலைகளில் தண்ணீர் சூழ்ந்துள்ளது. கிண்டி வேளச்சேரி பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை, கிழக்கு கடற்கரை சாலை, பழைய மாமல்லபுரம் சாலையும் வெள்ளம் காரணமாக போக்குவரத்து முடக்கம் ஏற்பட்டுள்ளது. சென்னை வருவதற்கு பெங்களூர் சாலை மட்டுமே தற்போது பயன்படுத்தப்படுகிறது. இதனால் தென் மாவட்டங்களில் இருந்து வரும் வாகனங்கள் சென்னை வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

கடைகள் அடைப்பு
பெரும்பாாலன கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. பால் காய்கறிகள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் வாங்க முடியவில்லை. ஓட்டல்கள் மூடப்பட்டன. இதனால் உணவு கிடைக்காமல் பலர் சிரமப்படுகின்றனர்.

தகவல் தொடர்பு துண்டிப்பு
சென்னையில் உள்ளவர்கள் மற்ற மாவட்டங்களில் உள்ள உறவினர்கள், நண்பர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை. மற்ற தகவல் தொடர்பு சாதனங்களும் செயல் இழந்துள்ளன.

மின்சாரம் துண்டிப்பு
கனமழையால் நகரிலும் புறநகர் பகுதிகளிலும் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் செல்போன்களை சார்ஜ் செய்ய முடியவில்லை. அங்கு வசிப்பவர்கள், நண்பர்கள் மற்றும் உறவினர்களை தொடர்புகொள்ள முடியவில்லை.

மாற்றுப்பாதையில் ரயில்கள்
பாண்டியன்- திண்டுக்கல் ரயில் நெல்லை -சென்னை ரயில் , கன்னியாகுமரி -சென்னை ரயில், குருவாயூர்- சென்னை உள்ளிட்ட 15 ரயில்கள் காட்பாடி வழியாக திருப்பிவிடப்பட்டன.

ஸ்தம்பித்த நகரம்
செம்பரப்பாக்கம், புழல், பூண்டி, மதுராந்தகம் ஏரிகளில் இருந்து தொடர்ந்து பல ஆயிரம் கன அடி திறந்து விடப்பட்டுள்ளதால், ஜி.எஸ்.டி., சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. பல சாலைகளில் அடையாறு வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. வாகனங்கள் ஆங்காங்கே ஸ்தம்பித்துள்ளன. வேலைக்கு சென்ற பலர் மணிக்கணக்காக வீடு திரும்ப முடியாமல் தவிக்கின்றனர்.

மின்சார ரயில் ரத்து
செங்கல்பட்டு - சென்னை கடற்கரை இடையே மின்சார ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. செங்கல்பட்டு - திருமால்பூர் - காஞ்சிபுரம் இடையேயும் மின்சார ரயில்சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.

3 சாலைகளும் துண்டிப்பு
சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை, கிழக்கு கடற்கரை சாலை, பழைய மாமல்லபுரம் சாலையும் வெள்ளம் காரணமாக போக்குவரத்து முடக்கம் ஏற்பட்டுள்ளது. சென்னை வருவதற்கு பெங்களூர் சாலை மட்டுமே தற்போது பயன்படுத்தப்படுகிறது. இதனால் தென் மாவட்டங்களில் இருந்து வரும் வாகனங்கள் சென்னை வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

தனித்தீவான நகரம்
சென்னைக்கு உள்ளேயே பல பகுதிகள் தனித்தனியாக துண்டிக்கப்பட்டுள்ளன. கிட்டத்தட்ட தனித்தீவு நிலைக்கு சென்னை தள்ளப்பட்டுள்ளது. இன்னும் நான்கு நாட்களுக்கு மழை நீடிக்கும் என்பதால் சென்னைவாசிகள் செய்வதறியாது தவித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications