தண்ணீர்தேசமாக மாறிய சென்னை புறநகர் பகுதிகள்: மொட்டைமாடிகளில் தஞ்சம் - ஹெலிகாப்டரில் மீட்க முயற்சி
சென்னை: வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் அடைமழை கொட்டிவருகிறது. தாழ்வான பகுதிகளை வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. சென்னையின் புறநகர் முழுவதும் தண்ணீர் தேசமாக மாறியுள்ளது. மொட்டைமாடிகளில் தஞ்சமடைந்துள்ள மக்களை ஹெலிகாப்டர் மூலம் மீட்க தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர்முயற்சி செய்து வருகின்றனர்.
அடித்து துவைத்து வரும் அடைமழையால் சென்னைவாசிகள் ஆடித்தான் போயுள்ளனர். ஏய் யாருக்கு வேணும் தண்ணீ... கர்நாடகாவுக்கா...கேரளாவுக்கா வாங்கடா... வாங்கடா.... என்று மீம்ஸ் போட்டு கலக்குகின்றனர்.
"மழை வெள்ளத்தை சபிக்காதீர்கள்.... திருடப்பட்ட தன் ஏரிகளையும், குளங்களையும் தேடி அவை அலைகின்றன" என்று கவிதையாய் வாட்ஸ் அப்பில் ஆறுதல் சொல்லுகின்றனர் சிலர். தாழ்வான பகுதியான வேளச்சேரி சபிக்கப்பட்ட பகுதியாக மாறியுள்ளது.

வெள்ளம் சூழ்ந்த வேளச்சேரி
வேளச்சேரியில் அனைத்து தெருக்களும் தண்ணீரால் சூழப்பட்டுள்ளன. கடந்த சில நாட்களாக அப்பகுதி மக்கள் வீடுகளுக்குள் மூடங்கி இருந்த நிலையில் தீயணைப்பு துறையினர் படகுகள் மூலம் அங்கு மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

இனிமே படகுதான்
6 அடிஉயர மழைநீரில் மக்கள் பரிதவிக்கும் காட்சிகள் ஊடகங்களில் வெளியாகி 'உச்' கொட்ட வைக்கின்றன. தென்சென்னையின் மடிப்பாக்கம், ராம் நகரில் அத்தியாவசியப் பொருட்கள் வாங்க பொதுமக்கள் படகுகளில் செல்கின்றனர்.

போக்குவரத்து நிறுத்தம்
சாலைகளில் வெள்ள நீரால் வேளச்சேரி-தாம்பரத்தில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. ஆதம்பாக்கம் சுரங்கப்பாதையில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் போக்குவரத்து முடங்கியுள்ளது.

மொட்டைமாடிகளில் தஞ்சம்
இதேபோல் சென்னை பழைய பெருங்குளத்தூரில் 50 குடும்பங்கள் மழை நீரில் தவித்து வருகின்றனர். வரதராஜபுரம் குடியிருப்பு பகுதியில் 10 அடிக்கும் மேல் தண்ணீர் சூழ்ந்துள்ளது. வீட்டின் மாடிகளில் தஞ்சம் அடைந்துள்ள 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் தத்தளித்து வருகின்றனர்.

முட்புதர்கள் சூழ்ந்த பகுதி
புறநகர் பகுதிகளில் அங்கொன்றும் இங்கொன்றுமாக கான்கிரீட் கட்டிடங்கள் கண்களுக்குத் தட்டுப்படுகின்றன. தரை தளங்களை வெள்ளநீர் சூழ்ந்துள்ளதால் பாம்புகளுக்கு பயந்து குடியிருப்பு வாசிகள் மொட்டைமாடிகளில் தஞ்சம் புகுந்துள்ளனர்.

ஹெலிகாப்டர் மூலம் மீட்பு
தவிக்கும் மக்களை மீட்க படகுகளை பயன்படுத்த முடியாத பகுதிகளில் ஹெலிகாப்டர் மூலம் மீட்க முயற்சி செய்கின்றனர் தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர். ஆனாலும் பயனில்லை. விடாமல் பெய்து வரும் மழையால் மக்கள் கைகளை ஆட்டி அழைத்தும் இறங்கமுடியாமல், மக்களை மீட்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

தொடரும் கனமழை
கிருஷ்ணாபுரம் பகுதிகளில் வெள்ளநீரை வேடிக்கைப் பார்த்துக்கொண்டு வேதனையோடு நின்று கொண்டிருக்கின்றனர்.
கனமழை 24 மணிநேரத்திற்கு நீடிக்கும் என்று கூறியுள்ள நிலையில் கடந்த 4 நாட்களாக தூக்கம் தொலைத்து உணவு, குடிநீர் இன்றி தண்ணீர் தேசத்தில் சிக்கி தவித்து வருகின்றன சென்னை புறநகர்வாசிகள்.












Click it and Unblock the Notifications