குப்பை மலையாக மாறிய சென்னை... சிங்கார சென்னையாகுமா?
சென்னை: வெள்ளம் வந்து கொட்டிவிட்டு போன குப்பைப்கிடங்காய் காட்சியளிக்கிறது சென்னை மாநகரம். பல ஆயிரம் டன் குப்பைகள் மலையாக குவிந்துள்ளன. இந்த குப்பைகளை அகற்றுவதற்கு இங்கு இருக்கும் பணியாளர்கள் போதாது என்பதால் பிற மாநகராட்சிகளில் இருந்து ஆயிரக்கணக்கான துப்புறவு பணியாளர்கள் சென்னைக்கு வரவழைக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தின் தலைநகர் சென்னை வடகிழக்கு பருவமழை கொட்டி தீர்த்ததால் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கிபோன சென்னையில் மீட்பு பணிகள் தீவிரம் அடைந்துள்ளன. பொதுமக்கள் தற்போது வெள்ளம் வடிய ஆரம்பித்துள்ளதால் வீடுகளை விட்டு வெளியேறி சொந்த ஊருக்கு செல்லும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
சென்னையில் கடந்த வாரம் பெய்த கன மழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் அனைத்து சாலைகளிலும் 2 அடி உயரத்துக்கு வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வாகனங்கள் செல்ல முடியாத நிலையில் வரலாறு காணாத அளவிற்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதன் பாதிப்பால், தேங்கிய குப்பைகள் அனைத்தும் வெள்ள நீரில் அடித்து கொண்டு சாலை முழுவதும் சேறும் சகதியுமாக மாறியுள்ளது.
மேலும், சென்னை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட 42 உள்ளாட்சி பகுதிகளில் குறிப்பாக, நெற்குன்றம், உள்ளகரம், மாதவரம், ராமாபுரம், காரம்பாக்கம், நொளம்பூர், மணப்பாக்கம், நந்தம்பாக்கம், சோழிங்கநல்லூர், துரைப்பாக்கம், சடையான்குப்பம், கடப்பாக்கம், வடபெரும்பாக்கம், மணலி, சூரப்பட்டு, கதிர்வேடு, புழல், பள்ளிக்கரணை, கொட்டிவாக்கம், சின்னசேக்காடு, முகலிவாக்கம், பெருங்குடி, பாலவாக்கம், மடிப்பாக்கம், நீலாங்கரை, செம்மஞ்சேரி, மாத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் முறையான கட்டமைப்பு இல்லாததால் இன்னமும் மழை நீர் சரியாக வடியவில்லை.

மலையாக குவிந்த குப்பைகள்
வெள்ளம் வடிந்த பகுதிகளில் குப்பைகள் மலைபோல குவிந்துள்ளன. இதனால் துர்நாற்றம் வீசுவதோடு நோய் பரவும் அபாயம் எழுந்துள்ளது. சென்னையில் இப்போதைக்கு உடனடியாக செய்யவேண்டிய முதல்பணி குப்பைகளை அகற்றுவதுதான்.

மதுரையில் இருந்து 100 பேர்
சிங்கார சென்னையை சீரமைக்க வெள்ளம் பாதித்த பகுதிகளில் துப்புரவு பணிக்காக மதுரை மாநகராட்சியில் இருந்து பணியாளர்கள் 100 பேர் சென்னைக்கு வந்துள்ளனர். சில நாட்கள் அங்கு தங்கி இருந்து அவர்கள் மீட்பு பணியில் ஈடுபடுவதோடு, மலையாய் குவிந்துள்ள குப்பைகளை அப்புறப்படுத்துவார்கள்.

1139 துப்புரவு பணியாளர்கள்
நெல்லை மாநகராட்சியில் இருந்தும் 100 துப்புறவு பணியாளர்கள் சென்னைக்கு வந்துள்ளனர். சென்னை மாநகரப் பகுதியில் துப்புரவு பணிகளை வலுப்படுத்த கூடுதலாக 1139 துப்புரவு பணியாளர்கள் பிற மாநகராட்சி மற்றும் நகராட்சிகளில் இருந்து சென்னைக்கு வரவழைக்கப்பட்டுள்ளனர்.

சென்னை மாநகராட்சி
சென்னையில் கடந்த இரு நாட்களாக மழை குறைந்துள்ள நிலையில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் துப்புரவு பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இப்பணியில் மாநகராட்சி பணியாளர்கள் மற்றும் ஒப்பந்த பணியாளர்கள் என மொத்தம் 22 ஆயிரத்து 500 பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர் சென்னை மாநகராட்சி செய்தி குறிப்பு தெரிவிக்கிறது.

தமிழகம் முழுவதும் பணியாளர்கள்
சென்னை மாநகராட்சியில் துப்புரவுப் பணியை வலுப்படுத்தும் வகையில் பிற மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளில் இருந்து 25 துப்புரவு ஆய்வாளர்கள், 44 துப்புரவு மேற்பார்வையாளர்கள், 1070 துப்புரவு பணியாளர்கள் என மொத்தம் 1139 பணியாளர்கள் வரவழைக்கப்பட்டு, தற்போது பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 52 குப்பை லாரிகளும் வரவழைக்கப்பட்டுள்ளன.

உணவுகள் விநியோகம்
மழையால் பாதிக்கப்பட்டவர்கள் 114 முகாம்களில் தங்க வைக்கப்பட்டு, தினமும் 1 லட்சத்து 32 ஆயிரம் உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதற்கான உணவு, 252 அம்மா உணவகங்கள் மற்றும் 4 மைய சமையல் கூடங்களில் இருந்து தயாரிக்கப்பட்டு வருகிறது.

292 மருத்துவ முகாம்கள்
200 வார்டுகளிலும் 292 மருத்துவ முகாம்கள் நடைபெற்று வருகிறது. மழைநீர் தேங்கிய பகுதிகளில் பிளீச்சிங் பவுடர்கள் தூவப்பட்டு வருகிறது என்று செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காய்ச்சல், சேற்றுப்புண்
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சேற்றில் நடந்து பலருக்கும் கால்களில் புண்கள் வந்துள்ளது. இதனால் காய்ச்சலில் அவதிப்படுகின்றனர். நோயில் சிரமப்படும் மக்களை உடனடியாக கவனிப்பதும் அவசியம் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள். மலையாக குவிந்து கிடக்கும் குப்பைகளை அகற்றினால் மட்டுமே பல ஆயிரக்கணக்கான மக்களுக்கு நோய் தொற்று ஏற்படாமல் காக்க முடியும் என்பதும் சமூக ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது.












Click it and Unblock the Notifications