இடியுடன் கூடிய மழை.... குளிர்ந்த சென்னை…. மகிழ்ந்த மக்கள்
சென்னை: சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் நேற்றிரவு இடியுடன் கூடிய கனமழை பெய்து மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அதிகாலைவரை மழை நீடித்த காரணத்தால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்தது.
காலை நேரத்திலும் சாரல்மழை பெய்துவருவதால் பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள் பாதிக்கப்பட்டனர். ஆனாலும் மழையில் நனைந்தவாறே பள்ளிக்குப் புறப்பட்டு சென்றனர்.

அனலை குறைத்த மழை
அக்னி நட்சத்திரம் முடிந்து 10 நாட்கள் கடந்த நிலையிலும், சென்னையில் வெயிலின் தாக்கம் அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்தநிலையில் நள்ளிரவு 1 மணி அளவில், பலத்த காற்றுடன் கனமழை பெய்யத் தொடங்கியது.

பெருகிய வெள்ளம்
கோயம்பேடு, வடபழனி, கிண்டி, திருவல்லிக்கேணி, சைதாப்பேட்டை, மைலாப்பூர், தி.நகர், அடையாறு, பெசன்ட் நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் இரவு விட்டுவிட்டு பரவலாக மழை பெய்தது. சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக இடியுடன் பெய்த கன மழையால், சாலைகளில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடியது.

சாரல்மழை
அதிகாலை நேரத்தில் சாரல் மழையாக மாறியது. காலை 9 மணிவரையிலும் மழை நிற்காமல் பெய்த காரணத்தால் பள்ளி, கல்லூரிக்குச் செல்வோரும் அலுவலகம் செல்வோரும் பாதிக்கப்பட்டனர்.

குளிர்ந்த சென்னை
சாலைகளில் வெள்ளநீர் தேங்கி நின்ற காரணத்தால் வாகனஓட்டிகள் சிரமத்திற்குள்ளாகினர். ஆனாலும் நேற்றுவரை வாட்டி வதைத்த அனல் காற்றின் தாக்கம் குறைந்துள்ளதால் சென்னைவாசிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

மழை தொடரும்
வெப்பச் சலனத்தால் சென்னை மற்றும் தமிழகத்தின் ஓரிரு இடங்களில் மழை நீடிக்க வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications