2011-ஐ விட ரொம்ப மோசமாக ஓட்டுப் போட்ட சென்னை மக்கள்!
சென்னை: சென்னை வாக்காளர்களைப் பார்த்து ஊரே கிண்டலடிக்கும் நிலை ஏற்பட்டு விட்டது. காரணம் மிக மிக முக்கியமான, வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த தேர்தலை அவர்கள் அலட்சியப்படுத்தியது. கடந்த 2011 தேர்தலை விட இந்த முறை சென்னை மாவட்டத்தில் வாக்குப் பதிவு குறைவாக நடந்துள்ளது அனைவரையும் அதிர வைத்துள்ளது.
சென்னை மாவட்டத்தில் மொத்தம் 16 சட்டசபைத் தொகுதிகள் உள்ளன. இங்கு முதல்வர் ஜெயலலிதாவும், திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினும் போட்டியிட்டனர்.
கடந்த ஆண்டு இறுதியில் வந்த மாபெரும் வெள்ளத்தில் சிக்கி சென்னையே மூழ்கிப் போனது. இதை வைத்து ஏகப்பட்ட அரசியல் வெள்ளம் கரை புரண்டோடியது. இதனால் இந்த தேர்தலில் சென்னையில்தான் வாக்குப் பதிவு அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சென்னைதான் குறைந்த அளவிலான வாக்குப் பதிவை கண்டு அனைவரையும் அதிர வைத்துள்ளது.

2011 தேர்தலிலும் இதே கதைதான்
கடந்த 2011 சட்டசபைத் தேர்தலில் தமிழகத்திலேயே அதிக அளவிலான வாக்குப் பதிவை கண்ட மாவட்டம் கரூர். அங்கு 86 சதவீத வாக்குகள் பதிவாகின. குறைந்த அளவிலான வாக்குப் பதிவை கண்ட மாவட்டம் சென்னைதான்.

இதுக்கு அது பரவாயில்லை
கடந்த தேர்தலில் சென்னை மாவட்டத்தில் பதிவான வாக்குகள் 68.02 சதவீதமாகும். ஆனால் இந்த முறை அதை விட குறைந்து போயுள்ளது கவலைகளை ஏற்படுத்துவதாக உள்ளது.

வெறும் 60.47 மட்டுமே
இந்த முறை வெறும் 60.47 சதவீத வாக்காளர்கள்தான் ஓட்டுப் போட்டுள்ளனர். இத்தனைக்கும் சென்னையில் 100 சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி தாறுமாறாக விளம்பரம் செய்தது தேர்தல் ஆணையம். ஆனால் படிச்சவன் பாட்டைக் கெடுப்பான் கதையாக மெத்தப் படித்த மேதாவிகள் நிறைந்த சென்னை அனைவரையும் ஏமாற்றி விட்டது.

அதிகம் ஆர்.கே.நகர் - குறைவு மயிலாப்பூர்
சென்னையில் உள்ள தொகுதிகளிலேயே அதிக அளவாக ஆர்.கே.நகரில்தான் 67 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. குறைந்த அளவிலான வாக்குப் பதிவு மயிலாப்பூரில் 55.2 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. துறைமுகத்தில் 55.27 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.












Click it and Unblock the Notifications