வாடை அது வாட்டுது.. சென்னையில் சிலுசிலு காத்து .. கூடவே வெயில்... இப்படித்தான் இருக்குமாம்!

நல்லதொரு மழையை சில நாட்களுக்கு முன்பு குறைநத் காற்றழுத்தத்தின் புண்ணியத்தால் சென்னை மக்கள் பெற்றனர். ஆனால் கன மழை ஒரே நாளில் நின்று போய் விட்டது.. ரமணன் 2 நாட்களுக்கு மழை இருக்கும் என்று கூறியிருந்தார்.
இப்போது மழை இல்லை. ஆனால் காற்று வீசி வருகிறது. அதுவும் வாடைக் காற்றாக இருக்கிறது. காலையில் வாக்கிங் போகலாம் என்று வெளியில் நடந்தால் சில்லென்று உடலில் ஊசி பாய்ந்தாற் போல குளிரடிக்கிறது.
பகலிலும் அதே போலத்தான் வாடையாக இருக்கிறது. கூடவே வெயிலும் அடிக்கிறது. இந்த வறண்ட வானிலை தொடரும் என்று வானிலை மையம் விளக்கியுள்ளது.
வங்கக் கடலில் உருவாகியிருந்த குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை தாழ்வு மண்டலமாக இன்னும் மாறவில்லையாம். இதனால்தான் மழை நின்றுள்ளதாம்.
தற்போது இது சென்னையிலிருந்து தென் கிழக்கில் 700 முதல் 800 கிலோமீட்டர் தூரத்தில் நிலை கொண்டுள்ளது. அது நகருவதைப் பொறுத்துத்தான் மழை குறித்து அனுமானிக்க முடியுமாம்.
அதேசமயம், கடலோர பகுதிகளில் ஓரளவு மழையை எதிர்பார்க்க முடியுமாம். சென்னையில் வறட்சியான வானிலையே நிலவும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டு சென்னையில் இதுவரை 106 செமீ மழை பெய்துள்ளது. வருடாந்திர சராசரியானது 140 செமீட்டராகும்.












Click it and Unblock the Notifications