சென்னையில் காத்துவாங்கும் சாலைகள்... பின்ன ஐந்தரை லட்சம் பேர் ஊருக்கு கிளம்பிட்டாங்கல்ல!
தீபாவளிப் பண்டிகையை சொந்த ஊரில் கொண்டாடுவதற்காக சென்னையில் இருந்து ஐந்தரை லட்சம் பேர் கிளம்பியள்ளதால் நகரின் சாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன.
சென்னை : தீபாவளிப் பண்டிகையை குடும்பத்துடன் கொண்டாடுவதற்காக சென்னையில் இருந்து சுமார் 5.5 லட்சம் மக்கள் சொந்த ஊர் புறப்பட்டுச் சென்றுள்ளதால் இங்கு சாலைகள் வெறிச்சோடிக் கிடக்கின்றன.
தீபாவளி பண்டிகையின் போது மக்கள் சிரமமின்றி பயணம் செய்ய வசதியாக தமிழக போக்குவரத்துத் துறை சார்பில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன. சென்னை மட்டுமின்றி தமிழகத்தின் பிற பகுதிகளில் இருந்தும் சிறப்புப் பேருந்துகள் செயல்பட்டன.கடந்த 15, 16 மற்றும் 17-ந்தேதிகளில் சென்னையில் இருந்து 10,993 பஸ்கள் விடப்பட்டன.
மேலும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதைத் தவிர்க்கும் விதமாக தற்காலிக பேருந்து நிறுத்தங்களும் ஏற்படுத்தப்பட்டன. கோயம்பேடு, அண்ணா நகர், சைதாப்பேட்டை, தாம்பரம் சானடோரியம், பூந்தமல்லி ஆகிய இடங்களில் இருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன.

எவ்வளவு பேர் பயணம்
சென்னையில் இருந்து இயக்கப்பட்ட சிறப்புப் பேருந்துகளில் பயணம் செய்ய சுமார் 86 ஆயிரம் பேர் முன்பதிவ செய்த நிலையில், ஏறத்தாழ 5 லட்சத்து 52 ஆயிரத்து 624 பயணிகள் பயணம் செய்துள்ளனர். சென்னையைத் தவிர்த்து தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்து சிறப்புப் பேருந்துகளில் பயணிக்க ஒரு லட்சத்து 50 ஆயிரத்து 201 பயணிகள் முன்பதிவு செய்துள்ளனர்.

கைகொடுத்த சிறப்பு ஏற்பாடுகள்
தீபாவளி பேருந்துகள் இயக்கியதன் மூலம் ரூ.5 கோடியே 1 லட்சத்து 43 ஆயிரம் வருமானம் கிடைத்துள்ளது. கனரக வாகனங்களை பீக் ஹவர்களில் நகருக்குள் அனுமதிக்காதது, சுங்கச்சாவடிகளில் பேருந்துகளுக்காக சிறப்பு வழித்தடம் அமைத்தது போன்ற ஏற்பாடுகள் மக்கள் சிரமமின்றி காத்திருக்காமல் பயணிக்க உதவியுள்ளது.

காத்து வாங்கும் சாலைகள்
மேலும் வழக்கமாக தீபாவளி காலகட்டத்தில் வெளுத்து வாங்கும் மழை இந்த ஆண்டு அவ்வளவாக இல்லாததும் போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் இருந்ததற்கு முக்கியக் காரணமாக சொல்லப்படுகிறது. சென்னையில் இருந்து சுமார் ஐந்தரை லட்சம் பேர் சொந்த ஊர் சென்ற நிலையில் நகரில் சாலைகள் வாகன நெரிசலின்றி மக்கள் நடமாட்டம் இன்றியம் வெறிச்சோடி இருக்கிறது.

போக்குவரத்து நெரிசல் இருக்கும்
பண்டிக்காக ஊருக்குச் சென்றவர்கள் சென்னைக்கு திரும்பவும் சிறப்புப் பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. எனினும் பள்ளிகளுக்கு இன்றும் விடுமுறை என்பதால் நாளை ஒரு நாள் விடுப்பு எடுத்துவிட்டு வார இறுதியில் சென்னை திரும்ப பலரும் திட்டமிட்டிருப்பதால் ஞாயிற்றுக் கிழமை தான் வாகன நெரிசல் அதிகம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications