தாலிபான்களின் தோட்டாக்களில் சிக்கி மடிந்த பாக். சிறார்களுக்கு சென்னையில் கண்ணீர் அஞ்சலி!
சென்னை: பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் தாலிபான் தீவிரவாதிகள் ராணுவப் பள்ளியில் நுழைந்து சரமாரியாக சுட்டுத் தள்ளியதில் உயிரிழந்த 141 மாணவ, மாணவியர் மற்றும் ஆசிரியர்களுக்கு சென்னையில் பள்ளி மாணவர்கள் மெழுகுவர்த்திகளை ஏற்றி வைத்து கண்ணீர் அஞ்சலி செலுத்தியது நெகிழ்ச்சி அளிப்பதாக அமைந்தது.
பாகிஸ்தான் பெஷாவர் நகரில் பள்ளி மாணவர்கள் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு இந்தியா முழுவதும் பள்ளி மாணவர்கள் மவுன அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

நாடு முழுவதும் இன்று 2 நிமிட மெளன அஞ்சலி செலுத்தும் இரங்கல் நிகழ்ச்சி நடைபெற்றது. சென்னையிலும் கொளத்தூரில் உள்ள எவர்வின் இன்டர்நேஷனல் பள்ளியில் மாணவ, மாணவியர் மெழுகுவர்த்தியுடன் கண்ணீர் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

மாணவ, மாணவியர் கைகளில் மெழுகுவர்த்திகளை ஏந்தியபடி பெஷாவரில் மரணித்த தங்களைப் போன்ற மாணவ, மாணவியருக்காக இரங்கல் தெரிவித்து மெளனம் அனுஷ்டித்தனர்.
பல குழந்தைகள் அழுதபடியும், கண்ணீர் வழிந்தபடியம், சோகம் ததும்பிய முகத்துடனும் இரங்கல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டது பார்க்கவே உருக்கமாக இருந்தது.

நாடு முழுவதும் இன்று பல்வேறு பள்ளிகளிலும் இதுபோன்ற இரங்கல் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

சமூக வலைதளங்களிலும் பெருமளவிலான இந்தியர்கள், பாகிஸ்தான் குழந்தைகளுக்காக இரங்கல் தெரிவித்தும், இந்த தீய செயலைக் கண்டித்தும், பாகிஸ்தான் மக்களுக்கு ஆறுதல் தெரிவித்தும் செய்தி வெளியிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications