சென்னை சில்க்ஸ் கட்டட இடிபாட்டில் சிக்கி தொழிலாளி பலி
சென்னை சில்கஸ் கட்டட இடிபாட்டில் சிக்கி தொழிலாளி ஒருவர் பலியாகினார்.
சென்னை: சென்னை சில்க்ஸ் கட்டடத்தை இடிக்கும் போது இடிபாடுகளில் சிக்கி சரத் என்ற தொழிலாளி பலியாகியுள்ளார்.
பிரபல துணிக்கடையான தி சென்னை சில்க்ஸ் துணிக்கடையில் கடந்த 31-ஆம் தேதி அதிகாலை தீவிபத்து ஏற்பட்டது. மின் கசிவு காரணமாக தீவிபத்து ஏற்பட்டதாக கூறப்படும் இக்கடையில் இருந்து ஊழியர்கள் அனைவரும் உயிருடன் மீட்கப்பட்டனர்.

தகவலறிந்த தீயணைப்பு துறையினர் சம்பவஇடம் விரைந்து தீயை அணைக்க 3 நாட்களாக போராடினர். 60 தீயணைப்பு வாகனங்கள் வரழைக்கப்பட்டன. மேலும் 400-க்கும் மேற்பட்ட வீரர்கள் தீயை அணைக்க போராடினர். எனினும் மீண்டும் மீண்டும் அக்கட்டடத்தில் தீவிபத்து ஏற்பட்டது.
இதனால் அணைக்கு்ம பணிகள் பாதிக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து ஒரு வழியாக தீ அணைக்கப்பட்டது. இதனிடையே கட்டடத்தின் 4 மாடிகளும், முகப்பு பகுதிகளும் இடிந்து விழுந்தது. இதனால் கட்டடத்தின் ஸ்திரத்தன்மை மிகவும் மோசமான நிலையில் இருந்ததாக நிபுணர்கள் தெரிவித்தனர்.
மேலும் தானாக விழுந்தால் பலத்த சேதங்கள் ஏற்படலாம் என்பதால் கட்டடத்தை இடிக்க தமிழக அரசு முடிவு செய்தது. ஜாக்கட்டர் இயந்திரம் கொண்டு இந்த கட்டடத்தை தரைமட்டமாக்கும் பணிகள் நடைபெற்று வந்தன. இப்பணிகள் 3 நாள்களுக்குள் முடியும் என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறிய நிலையில் இயந்திரங்கள் பழமையானது என்பதால் அடிக்கடி பழுதாவதாலும் இடிக்கும் பணிகளில் தொய்வு ஏற்பட்டது.
இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஜாக்கட்டக் இயந்திரம் அக்கட்டடத்தை இடித்த போது கட்டடம் சரிந்து இயந்திரமே துண்டானது. இதைத் தொடர்ந்து ஜேசிபி இயந்திரம் கொண்டு இடிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று வழக்கம் போல் கட்டடத்தை இடிக்கும் பணிகள் நடைபெற்று வந்தபோது பெரிய ஸ்லாப் சரிந்து ஜேசிபி இயந்திரத்தின் மீது விழுந்தது.
இதனால் ஜேசிபி இயந்திரம் உடைந்தது.இதைத் தொடர்ந்து சரிவு ஏற்பட்டபோது அங்கு பணியாற்றிய தொழிலாளி இடிபாடுகளுக்குள் புதைந்தார். தகவலறிந்த தீயணைப்பு வீரர்கள் அவரை இடிபாட்டில் இருந்து மீட்டனர். எனினும் அவர் உயிரிழந்துவிட்டார். அவர் ஊத்தங்கரையைச் சேர்ந்த சரத்குமார் (21) என்பது தெரியவந்தது.
இதனால் கட்டடம் இடிக்கும் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. ஸ்திரத்தன்மையற்ற கட்டடத்தை இடிக்கும் போது முறையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யாததும், அதை எவ்வாறு இடிப்பது என்று ஆராயாததுமே தொழிலாளி உயிரிழப்புக்கு காரணம் என்று கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications