ஜல்லிக்கட்டு.. தி.நகரில் பாஜக தலைமை அலுவலகம் முற்றுகை... மாணவர்கள் கைது
ஜல்லிக்கட்டை நடத்த எந்த நடவடிக்கையும் எடுக்காததைக் கண்டித்து சென்னையில் உள்ள பாஜக அலுவலகத்தை முற்றுகையிட்டு மாணவர்கள் அமைப்பினர் போராட்டம் நடத்தினர். அவர்களை போலீசார் கைது செய்துள்ளது.
சென்னை: ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க வேண்டும் என்று கோரி சென்னையில் உள்ள பாஜக அலுவலகத்தை மாணவர்கள் அமைப்பினர் முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர்.
பொங்கல் நெருங்கிவிட்ட நிலையில், ஜல்லிக்கட்டுக்கான ஆதரவு போராட்டங்கள், கோவை, சேலம், சிவகாமி, புதுக்கோட்டை, மதுரை, திருச்சி, காஞ்சிபுரம் என அனைத்து மாவட்டங்களிலும் தீவிரம் அடைந்துள்ளன.
இந்நிலையில், இன்று மாலை மாணவர்கள் அமைப்பினர் சென்னையில் உள்ள தியாகராயர் நகரில் ஒன்று கூடினார். ஜல்லிக்கட்டை நடத்த விடாமல் முட்டுக்கட்டைப் போட்டு வரும் மத்திய பாஜக அரசை கண்டிக்கும் வகையில், தி.நகரில் உள்ள வைத்தியநாதன் தெருவில் உள்ள பாஜக அலுவலகத்தை அவர்கள் முற்றுயிட்டனர். அப்போது, ஜல்லிக்கட்டு மீதான தடை நீக்கமாறும், மத்திய அரசைக் கண்டித்து கோஷங்களை எழுப்பினார்கள்.
இதனை போலீசார் தடுக்க முயன்றனர். அப்போது போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் இரு தரப்பினருக்கும் இடையே தகராறு மூளும் நிலை உருவானது. இதனையடுத்து, போலீசார் மாணவர்களை கைது செய்துள்ளனர். இதனால் பாஜக அலுவலகம் உள்ள தி.நகரில் பரபரப்பு ஏற்பட்டது.