பிரஸ்ஸல்ஸில் மாயமான இன்போசிஸ் ஊழியர் சென்னையை சேர்ந்தவர்- கண்டுபிடிக்க கோரி தாய் கண்ணீர்
சென்னை: பிரஸ்ஸல்ஸில் குண்டுவெடிப்பு சம்பவங்கள் நடந்த பிறகு மாயமான இன்போசிஸ் ஊழியர் ராகவேந்திரன் கணேஷ் சென்னையை சேர்ந்தவர்.
சென்னையை சேர்ந்தவர் ராகவேந்திரன் கணேஷ். அவர் இன்போசிஸ் நிறுவனத்தில் சேர்ந்து பெங்களூர் மற்றும் புனேவில் பயிற்சி முடித்தார். அதன் பிறகு அவர் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு பெல்ஜியத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
பெல்ஜியம் தலைநகர் பிரஸ்ஸல்ஸில் தங்கி வேலை செய்யும் ராகவேந்திரன் பிரஸ்ஸல்ஸில் குண்டுவெடிப்பு சம்பவங்கள் நடப்பதற்கு ஒரு மணிநேரத்திற்கு முன்பு மும்பையில் வசிக்கும் தனது தாய் அன்னபூரணியிடம் ஸ்கைப் மூலம் பேசியுள்ளார்.

அதன் பிறகு அவரை யாராலும் தொடர்பு கொள்ள முடியவில்லை. அவர் வேலைக்கு செல்ல குண்டுவெடிப்பு சம்பவம் நடந்த மெட்ரோ ரயில் நிலையத்தை தான் தினமும் பயன்படுத்துவார். இந்நிலையில் அவர் மாயமாகியுள்ளது அவரது குடும்பத்தாரை கவலை அடைய வைத்துள்ளது. ராகவேந்திரனின் சகோதரர் ஜெர்மனியில் வசிக்கிறார். அவர் ராகவேந்திரனை கண்டுபிடிக்க பிரஸ்ஸல்ஸ் சென்றுள்ளார்.
இது குறித்து அன்னபூரணி கூறுகையில்,
குண்டு வெடிப்பதற்கு ஒரு மணிநேரத்திற்கு முன்பு தான் என் மகன் ஸ்கைப் மூலம் என்னுடன் பேசினான். வேலைக்கு கிளம்பிக் கொண்டிருப்பதாக தெரிவித்தவன் 10 நிமிடத்தில் கிளம்பிவிட்டான். ஒரு மணிநேரம் கழித்து ஜெர்மனியில் வசிக்கும் என் மற்றொரு மகன் போன் செய்து பிரஸ்ஸல்ஸில் குண்டுவெடிப்பு சம்பவங்கள் நடந்ததாக தெரிவித்தான்.
இதையடுத்து டிவியை பார்த்தேன். குண்டுவெடித்த மெட்ரோ வழித்தடம் வழியாகத் தான் என் மகன் வேலைக்கு செல்வான். என் மகனை கண்டுபிடித்து கொடுங்கள் என்று கண்ணீர் மல்க தெரிவித்தார்.
கணேசனின் மனைவி சென்னையில் வசிக்கிறார். கர்ப்பிணியாக இருந்த அவருக்கு கடந்த மாதம் குழந்தை பிறந்தது. குழந்தையை பார்க்க கணேசன் கடந்த மாதம் சென்னை வந்தார்.












Click it and Unblock the Notifications