கேஸ் சிலிண்டர்.. புக்கிங்கில் இந்த விஷயத்தை மிஸ் பண்ணாதீங்க.. நெருக்கடியை சந்திக்கும் இல்லத்தரசிகள்
சென்னை: சென்னையில் கடந்த சில நாட்களாக கேஸ் சிலிண்டர்கள் உரிய நேரத்தில் கிடைக்கவில்லை என்று புகார்கள் எழுந்துள்ளன. வழக்கமான நாட்களை விட 4 நாட்கள் கழித்துதான் சிலிண்டர்கள் கிடைப்பதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
சென்னையில் கேஸ் சிலிண்டர் விநியோகம் எப்போதும் சீராக இருக்கும். அதிகபட்சமாக இரண்டு நாட்களில் சிலிண்டர் வீடு தேடி வந்துவிடும். மழை, புயல், வெள்ளம் எதுவாக இருந்தாலும் சரி புக் செய்த அடுத்த நாள் வீடு தேடி சிலிண்டர் வந்துவிடும். இப்படி இருக்கையில் கடந்த சில நாட்களாக புக் செய்து 4 நாட்கள் ஆகியும் சிலிண்டர் கிடைக்கவில்லை என்று பொதுமக்கள் கேஸ் நிறுவனத்திற்கு போன் மேல் போன் போட்டு வருகின்றனர். கோயம்பேடு, வில்லிவாக்கம், அயனாவரம், ரெட்டேரி, திருவல்லிக்கேணி, திருவொற்றியூர், திருவான்மியூர் என வட, தென் மற்றும் மத்திய சென்னை பகுதிகளில் கேஸ் விநியோகம் தாமதமாகியுள்ளது.

திருவான்மியூரில் புக் செய்யப்பட்டால் 8 நாட்கள் கழித்துதான் சிலிண்டர் வீட்டிற்கு வந்து சேர்ந்துள்ளது. வில்லிவாக்கத்தில் 6 நாட்கள் வரை ஆகிறது. திருவொற்றியூரிலும் வழக்கத்திற்கு மாறாக சிலிண்டர் விநியோகத்திற்கு கூடுதலான நாட்கள் எடுத்துக்கொள்வதாக இல்லத்தரசிகள் புகார் கூறி வருகின்றனர். சில இடங்களில் மக்கள் காலி சிலிண்டரை கேஸ் ஏஜென்சிக்கு கொண்டு சென்று கொடுத்துவிட்டு புது சிலிண்டர் கேட்டு வாங்கி வருகிறார்கள். இதனால் கேஸ் ஏஜென்சி நிறுவனங்கள் நெருக்கடியை சந்தித்துள்ளன.
இதுகுறித்து வில்லிவாக்கம் மக்கள் கூறுகையில், "வழக்கமாக கேஸ் புக் செய்தால் அடுத்த நாளில் வந்துவிடும். ஆனால் நாங்கள் புக் செய்து நான்கு நாட்கள் ஆகிவிட்டது தற்போது வரை சிலிண்டர் கிடைக்கவில்லை. யாருக்கும் இதுபோல சிலண்டர் கிடைக்கவில்லை என்பதால் இரண்டு சிலிண்டர் வைத்திருப்பவர்கள் கூட ஒரு சிலண்டரை கொடுக்கவில்லை. எனவே எங்களுக்கு பெரும் சிரமமாக இருக்கிறது. சிலிண்டர் இல்லாததால் ஒவ்வொரு வேளையும் வெளியில்தான் உணவு சாப்பிட வேண்டியதாக இருக்கிறது. இதனால் கூடுதல் செலவாகிறது. இந்த விஷயத்தில் கேஸ் நிறுவனங்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கூறியுள்ளார்.

இந்த விவகாரம் குறித்து விசாரித்தபோது பல தகவல்கள் வெளிவந்துள்ளன. அதாவது கடந்த ஜனவரி மாதம் ஈரோட்டில் உள்ள இந்தியன் ஆயில் கார்ப்ரேஷன் நிறுவனத்தில் கேஸ் நிரப்பும் பணியின் போது ஊழியர் ஒருவர் உயிரிழந்துள்ளார். அதேபோல திருச்சி இனாம் குளத்தூரில் கேஸ் நிரப்பும் ஆலையில் ஏற்பட்ட விபத்து காரணமாக இருவர் காயமடைந்துள்ளனர். இந்த இரண்டு விபத்துக்களுக்கும் காரணம் காஸ் சிலிண்டர்கள்தான். அடியில் சிலிண்டர் துருப்பிடித்திருந்த காரணத்தினால் லாரி ஒன்றின் மீது ஒன்றாக சிலிண்டர் அடுக்கப்பட்டதில் அடிப்பக்கத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக சிலிண்டர் வெடித்திருக்கிறது.

பொதுவாக ஒவ்வொரு பத்து ஆண்டுகளுக்கும் ஒரு முறை புதிய சிலிண்டர்கள் மாற்றப்படும். இப்படி மாற்றப்படாத சிலிண்டர்களால்தான் விபத்து ஏற்பட்டிருக்கிறது. எனவே விபத்துக்களை தவிர்க்க புதிய சிலிண்டர்களை இந்தியன் ஆயில் கார்ப்ரேஷன் நிறுவனம் எதிர்பார்த்து காத்திருக்கிறது. அது வந்தவுடன் அதில் கேஸ் நிரப்பி விநியோகம் செய்கிறது. இந்த புதிய சிலிண்டர்கள் வருவதற்கு சற்று கால தாமதம் ஏற்படுவதால்தான் சிலிண்டர் விநியோகத்தில் தாமதம் ஏற்படுவதாக சொல்லப்படுகிறது. எனவே கேஸ் புக்கிங் செய்யும் போது ஒரு வாரத்திற்கு முன்னதாகவே புக்கிங் செய்துவிட்டால் இந்த நெருக்கடியிலிருந்து தப்பித்துக்கொள்ளலாம்.












Click it and Unblock the Notifications