பொய் வழக்கு போடுகிறார்கள்... போலீஸ் கமிஷனரிடம் மனு அளித்த மாஜி கொள்ளைக்காரர்
சென்னை: சென்னையை ஒருகாலத்தில் கலக்கிய பிரபலமான கொள்ளைக்காரன் ஒருவர் சென்னை போலீஸ் கமிஷனரிடம் மனு ஒன்றினை அளித்துள்ளார். தன் மீது போலீஸார் பொய் வழக்கு போடுவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
சைதாப்பேட்டை மேட்டுத் தெருவில் வசித்து வருபவர் கவுஸ்பாஷா. பல ஆண்டுகளுக்கு முன்பு சென்னையை கலக்கிய கொள்ளையனான இவர் மீது பல வழக்குகள் உள்ளன. இந்நிலையில் சமீபத்தில் ராயபேட்டையில் நடந்த தொடர் கொள்ளை வழக்கில் இவருக்கு தொடர்பு இருப்பதாக தகவல் வெளியானது.
இந்த நிலையில், கவுஸ்பாஷா சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு வந்தார். நடக்கவே முடியாத நிலையில் அவர் காணப்பட்டார்.
அவருடன் மகள் ரதி மற்றும் குடும்பத்தினர் வந்திருந்தனர். கவுஸ்பாஷா கமிஷனர் அலுவலகத்தில் அளித்த புகார் மனுவில், "கடந்த 22 ஆண்டுகளுக்கு மேலாக மேற்கண்ட முகவரியில் குடியிருக்கும் என் மீது சின்ன சின்ன திருட்டு வழக்குகள் உள்ளன.
பல வழக்குகளில் விடுதலை பெற்றுள்ளேன். சில வழக்குகளில் தண்டனை பெற்றுள்ளேன். கடந்த 5 ஆண்டுகளில் எந்த குற்ற வழக்குகளிலும் ஈடுபடாத நான் தற்போது நோய்வாய்பட்டு அவதிப்பட்டு வருகிறேன்.
இந்நிலையில் சமீபத்தில் நடந்த கொள்ளை சம்பவங்களில் எனது கைரேகை உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. எந்த குற்றமும் செய்யாத என் மீது பொய் வழக்கு போட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications