சென்னை வர்த்தக மையத்தை விரிவுபடுத்த நடவடிக்கை - சுதர்சன நாச்சியப்பன்
சென்னை: சென்னை வர்த்தக மையத்தை விரிவுபடுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மத்தியத் தொழில் மற்றும் வர்த்தகத் துறை இணை அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் கூறினார்.
இந்திய வர்த்தக மேம்பாட்டுக் கழகத்தின் சார்பில் 29-ஆவது இந்திய சர்வதேச தோல் பொருள்காட்சி நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை வர்த்தக மையத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கியது. பொருள்காட்சியைத் தொடங்கி வைத்து, சுதர்சன நாச்சியப்பன் பேசியதாவது:
"நுகர்வோர் தங்களுக்கு தேவையான பொருள்களை ஆன்-லைன் மூலம் பெறும் வகையில் தொழில்நுட்பம் வளர்ந்துவிட்டாலும், பெரும்பாலோர் பொருள்களை நேரடியாகப் பார்த்து வாங்கவே விரும்புகின்றனர்.
நுகர்வோரின் இவ்விருப்பத்தை நிறைவேற்றுவதில் இதுபோன்ற பொருள்காட்சிகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன.
தோல் பொருள்கள் உற்பத்திக்கு தேவையான நியாயமான கோரிக்கைகளையும் நிறைவேற்ற ஆவன செய்யப்படும்.
கண்காட்சிகள் நடத்த கூடுதல் இடம் தேவைப்படுவதை கருத்தில்கொண்டு, நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை வர்த்தக மையத்தை மேலும் நவீனப்படுத்தவும், விரிவுபடுத்தவும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார்.
கடந்த 2012-13-ஆம் நிதியாண்டில், அதிக லாபம் ஈட்டிய தோல் வர்த்தக நிறுவனங்களின் 74 பிரதிநிதிகளுக்கு கேடயமும், பாராட்டு சான்றிதழும் வழங்கப்பட்டது.
விழாவில் இந்திய வர்த்தக மேம்பாட்டுக் கழக செயல் இயக்குநர் மலே ஸ்ரீவத்சவா பேசியது:

"பிப்ரவரி 3-ஆம் தேதி வரை தினமும் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை இப் பொருள்காட்சி நடைபெறும். இதில் 18 நாடுகளைச் சேர்ந்த 385 தோல் தொழில் துறை நிறுவனங்கள் பங்கேற்கின்றன.
அவை, தோல் பதனிடுதல், தோல் பொருள்கள் வடிவமைப்பு, தொழில்நுட்பம், நவீன இயந்திரங்களின் பயன்பாடு உள்ளிட்டவை குறித்து தொழில் முனைவோருக்கு விளக்க உள்ளன," என்றார் அவர்.
இந்த நிகழ்ச்சியில் தோல் ஏற்றுமதி நிறுவனத்தின் தலைவர் ராஜேந்திர கே.ஜலான், தோல் ஏற்றுமதிக் கழகத்தின் செயல் இயக்குநர் ஆர்.ரமேஷ்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.












Click it and Unblock the Notifications