சென்னை- ‘வீட்டு வேலை’ என ஏமாற்றி சிறுமியை விபச்சார கும்பலிடம் விற்ற உறவினர்கள்
சென்னை: சென்னையில் பிளாட்பாரத்தில் குடும்பத்துடன் வசித்து வந்த சிறுமியை வீட்டு வேலைக்கு சேர்த்து விடுவதாகக் கூறி உறவினர்களே விபச்சாரக் கும்பலிடம் விற்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது சிறுமியை மீட்டுள்ள போலீசார், இது தொடர்பாக இரண்டு பேரை கைது செய்துள்ளனர்.
சென்னை திருவல்லிக்கேணி வாலாஜா ரோட்டில் உள்ள ஓட்டல் ஒன்றில் 15 வயது சிறுமியை அடைத்து வைத்து ஒருகும்பல் பாலியல் தொழிலில் ஈடுபடுத்துவதாக, சி.பி.சி.ஐ.டி. விபசார தடுப்பு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதனைத் தொடர்ந்து சி.பி.சி.ஐ.டி. கூடுதல் டி.ஜி.பி. கரன்சின்கா உத்தரவின் பேரில், ஐ.ஜி. மகேஷ்குமார் அகர்வால், டி.ஐ.ஜி. கணேசமூர்த்தி, சூப்பிரண்டு பெருமாள் ஆகியோரின் மேற்பார்வையில், துணை சூப்பிரண்டு ராஜாசீனிவாசன், இன்ஸ்பெக்டர் விக்டர் தலைமையிலான தனிப்படை போலீசார் குறிப்பிட்ட ஓட்டலில் அதிரடியாக புகுந்து சோதனை நடத்தினார்கள்.
அப்போது, ஒரு அறையில் 15 வயது சிறுமியை அடைத்து வைத்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியது உறுதியானது. மாறுவேடத்தில் வாடிக்கையாளர் போன்று நடித்து தரகரிடம் ரூ. 5 ஆயிரத்தைக் கொடுத்த போலீசார், சிறுமியை பத்திரமாக மீட்டனர்.
சிறுமியை பாலியல் தொழிலில் தள்ளியதாக, சென்னை புளியந்தோப்பைச் சேர்ந்த இளங்கோவன் மற்றும் பெண் தரகர் கிருஷ்ணவேணி ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். அதனைத் தொடர்ந்து அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பின்வரும் தகவல்கள் தெரியவந்துள்ளது.
தற்போது மீட்கப் பட்ட அச்சிறுமி, கடந்த ஆண்டு தாயார் இறந்துவிட கூலித்தொழிலாளியான தந்தை மற்றும் தம்பியுடன் சென்னை மூர்மார்க்கெட் அருகே பிளாட்பாரத்தில் குடியேறியுள்ளார். தந்தையின் வருமானம் குடும்பம் நடத்த போதுமானதாக இல்லாததால், சிறுமியை வீட்டு வேலைக்கு அனுப்புவதாகக் கூறி ஏமாற்றி விபச்சாரக் கும்பலிடம் விற்றுள்ளனர் உறவினர்கள் சிலர். இதற்காக தரகர் கிருஷ்ணவேணியிடம் அவர்கள் ரூ. 10 ஆயிரத்தைப் பெற்றுள்ளனர்.
தற்போது இந்த வழக்கில் தரகர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மேலும் இதில் தொடர்புடைய சிலரை போலீசார் தேடிவருகிறார்கள்.












Click it and Unblock the Notifications