பிளஸ் 2 தேர்ச்சி பெற்றால்! பைசா செலவில்லாமல் டிகிரி படிக்கலாம்! எந்தெந்த கல்லூரிகளில் தெரியுமா?
சென்னை: சென்னை பல்கலைக்கழகத்தில் இலவச கல்வித் திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் அரசு உதவி பெறும் கல்லூரிகள், தனியார் சுயநிதி கல்லூரிகளில் இளங்கலை படிப்புகளில் சேரலாம். எனவே, இலவசமாக இளங்கலை படிப்பில் சேர விரும்புபவர்கள் மே 23ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை பல்கலைக்கழகத்தின் கீழ் மொத்தம் 121 கல்லூரிகள் உள்ளன. அவற்றில் அரசு கல்லூரிகள் 18, அரசு உதவி பெறும் கல்லூரிகள் 24, சுயநிதி கல்லூரிகள் 89, ஆராய்ச்சி படிப்புக்கான கல்லூரிகள் 53 என மொத்தம் 121 கல்லூரிகள் இயங்கி வருகின்றன.
அதில் சென்னையில் லயோலா கல்லூரி, எத்திராஜ் மகளிர் கல்லூரி, ஸ்டெல்லா மாரிஸ் கல்லூரி, மகளிர் கிறிஸ்துவக் கல்லூரி, மீனாட்சி மகளிர் கல்லூரி உள்ளிட்டவை இருக்கின்றன. சென்னை பல்கலைக்கழகத்தின் கீழ் லட்சக்கணக்கான மாணவர்கள படித்து வருகின்றனர்.
இந்த நிலையில் சென்னை பல்கலைக்கழகத்தில் இலவச கல்வித் திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம், என்னென்ன ஆவணங்கள் தேவை, எப்படி விண்ணப்பிப்பது என்பதை பார்க்கலாம்.
இலவச கல்வி திட்டத்திற்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?
1) சென்னை பல்கலைக்கழகத்தின் இலவச கல்வித் திட்டத்தில் கீழ் இளங்கலை படிப்பில் சேர மாணவர்கள் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
2) மாணவர்கள் அனைத்து பாடத்திலும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 11,12ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழையும் மாணவர்கள் விண்ணப்பிக்கும்போது சமர்ப்பிக்க வேண்டும்.
3) மாணவர்கள் குடும்பத்தின் ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக வருவாய் துறை வட்டாட்சியர் வழங்கிய வருமான சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
4) சென்னை பல்கலைக்கழகத்தின் இலவச கல்வித் திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின்தங்கிய ஆதரவற்றோர், பெற்றோரை இழந்தவர்கள், மாற்றுத்திறனாளிகள் குடும்பத்தின் முதல் தலைமுறை மாணவர்கள், மூன்றாம் பாலினத்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
5) இதில் இருக்கும் ஒவ்வொரு பிரிவிலும் 1:2 என்ற விகிதத்தில் மாணவர்களின் சேர்க்கைகள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிப்பது எப்படி?
சென்னை பல்கலைக்கழகத்தின் இலவச கல்வித் திட்டத்தின் கீழ் சேர விரும்பும் மாணவர்கள் Unom.ac.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்ப படிவத்தில் கேட்கப்பட்டுள்ள விவரங்களை சரியாக பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும். 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியான தேதியில் இருந்து 15 நாட்களுக்குள் (மே 23) விண்ணப்பத்தை பதிவேற்றம் செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனைத்து சான்றிதழ்களும் சரியாக இருக்கும் விண்ணப்பங்கள் மட்டும் ஏற்கப்படும் எனவும் சென்னை பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
தேவையான ஆவணங்கள்
சென்னை பல்கலைக்கழகத்தின் இலவச கல்வித் திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க விரும்புபவர்கள் சில ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும். அதன்படி, 11,12ஆம் வகுப்புகளுக்கான மதிப்பெண் சான்றிதழ், ஒருவருடத்திற்கான வருமான சான்றிதழ், முதல் பட்டதாரி சான்றிதழ், மாற்றுத்திறனாளி சான்றிதழ், பெற்றோர்கள் இழந்தவர்கள் அவர்களுக்கான இறப்பு சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும்.
ஒருவேளை விண்ணப்பிக்கும்போது உங்களிடம் வருமான சான்றிதழ், முதல் பட்டதாரி சான்றிதழ் கிடைக்கவில்லை என்றால் வட்டாட்சியரிடம் இருந்து பெற்ற ஒப்புதல் சீட்டை பதிவேற்றம் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இதற்கான அசல் சான்றிதழை கலந்தாய்வுக்கு வரும்போது சமர்ப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, இலவச கல்வித் திட்டத்தில் சேர விரும்பும் மாணவர்கள் மே 23ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications