கப்பலைப் பார்க்கும் ஆசையில் ரயிலின் மீது ஏறிய வாலிபர்... மின்கம்பியைப் பிடித்ததால் படுகாயம்
சென்னை: சென்னையில், துறைமுகத்தில் நின்று கொண்டிருந்த கப்பலைக் காணும் ஆசையில் ரயிலின் மேற்கூரையில் ஏறிய வாலிபர் மின்கம்பியைப் பிடித்ததால் மின்சாரம் தாக்கிக் காயமடைந்தார்.
கடந்த சனிக்கிழமையன்று இரவு 11மணியளவில் சென்னைக் கடற்கரை ரயில் நிலையத்தில் மின்சார ரயில் ஒன்று நின்று கொண்டிருந்தது. அப்போது அதில் அமர்ந்திருந்த வாலிபர் ஒருவர் யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் ரயிலின் மேற்கூரையில் ஏறினார். அங்கு நின்றபடி கடலையும், துறைமுகத்தில் நின்று கொண்டிருந்த கப்பலையும் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தார்.
அப்போது, திடீரென அவரது கால் சறுக்கவே பிடிமானத்திற்காக மேலே சென்ற மின்சாரக் கம்பியைப் பிடித்து விட்டார். இதில் பலத்த சத்தத்துடன் தூக்கி வீசப்பட்டவர் கீழே பிளாட்பாரத்தில் வந்து விழுந்தார்.
உடனடியாக அந்த வாலிபரை மீட்ட ரயில்வே ஊழியர்கள், அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பாக எழும்பூர் ரயில்வே போலீசார் நடத்திய விசாரணையில், காயமடைந்த வாலிபரின் பெயர் கார்த்திக் (23) என்றும், அவர் டி.பி.சத்திரத்தைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்துள்ளது.