டிவி பார்த்ததால் திட்டிய தந்தை: மனமுடைந்த மகன் கிணற்றில் குதித்து தற்கொலை
சென்னை: டிவி பார்க்கக் கூடாது என தந்தை கண்டித்ததால் மனமுடைந்த மகன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சென்னையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை, அம்பத்தூரை அடுத்த கள்ளிக்குப்பம் முத்தமிழ் நகர் 2வது மெயின்ரோட்டில் வசித்து வரும் பாபு - பவானி தம்பதியினரின் 25 வயது மகன் முருகன். பன்னிரண்டாம் வகுப்பு முடிந்துள்ள முருகன், பாடியில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஒப்பந்தத் தொழிலாளராக வேலை பார்த்து வந்துள்ளார்.

கடந்த 3 மாதங்களாக வேலைக்குச் செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்துள்ளார் முருகன். இதனை அவரது பெற்றோர் கண்டித்து வந்துள்ளனர். இந்நிலையில், நேற்று அதிகாலை 3 மணி அளவில் டிவி பார்த்துக் கொண்டிருந்துள்ளார் முருகன். இதைக் கண்டு ஆத்திரமடைந்த பாபு, முருகனைத் திட்டி விட்டு மீண்டும் தூங்கச் சென்று விட்டார்.
மீண்டும் பாபு காலை 5 மணி அளவில் கண் விழித்துப் பார்த்த போது முருகன் வீட்டில் இல்லை எனக் கூறப்படுகிறது. எங்காவது வெளியில் சென்றிருப்பார் என அவரது பெற்றோர் நினைத்துள்ளனர்.
பின்னர், பவானி வீட்டில் உள்ள கிணற்றில் தண்ணீர் இறைக்கச் சென்றுள்ளார். அப்போது பெரிய கல் ஒன்று வாளியில் தட்டுப் பட்டுள்ளது. இதுபற்றி கணவர் பாபுவிடம் அவர் சொல்லியுள்ளார். மகன் வீடு திரும்பாத நிலையில், கிணற்றில் ஏதோ தட்டுப்படுவதால் சந்தேகம் அடைந்த பாபு, இது தொடர்பாக அம்பத்தூர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர்.
விரைந்து வந்த வீரர்கள் கிணற்றில் இறங்கி தேடினர். அப்போது காலில் கல் கட்டப்பட்ட நிலையில் முருகன் சடலமாக மீட்கப் பட்டார்.
இச்சம்பவம் தொடர்பாக அம்பத்தூர் போலீசார் வழக்குப்பதிவு விசாரித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications