சேப்பாக்கத்தில் போலீசார் குவிப்பு... நீதிபதி கர்ணனை கைது செய்யும் உத்தரவுக்காக காத்திருப்பு!
கொல்கத்தா நீதிமன்ற நீதிபதி கர்ணனை உச்சநீதிமன்ற உத்தரவையடுத்து கைது செய்யும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
சென்னை: உச்சநீதிமன்ற உத்தரவின் படி நீதிபதி கர்ணனை கைது செய்வதற்கான உத்தரவு நகலுக்காக சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகையில் போலீசார் காத்திருக்கின்றனர்.
உச்சநீதிமன்ற நீதிபதிகளை அவமதித்ததாக கொல்கத்தா நீதிபதி கர்ணனுக்கு 6 மாத சிறை தண்டனை விதித்து சுப்ரீம் கோர்ட்டு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தைச் சேர்ந்த சி.எஸ். கர்ணன் கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதியாக உள்ளார்.
இவர், சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக இருந்த சஞ்சய் கிஷன் கவுல் உள்ளிட்ட பல நீதிபதிகள் மீது ஊழல் புகார் கூறியதைத் தொடர்ந்து, உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தி வந்தது.
நீதிபதிகளுக்கு எதிராக ஊழல் புகார் கூறியதற்காக உச்சநீதிமன்றத்தால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கிற்குள்ளாகிய நீதிபதி கர்ணனுக்கு மனநல பரிசோதனை செய்ய சுப்ரீம் கோர்ட் சமீபத்தில் உத்தரவிட்டது. இதற்கு நீதிபதி கர்ணன் கடும் கண்டனம் தெரிவித்தார்.
இதனையடுத்து உச்சநீதிமன்ற நீதிபதிகளுக்கே மனநல பரிசோதனை செய்ய வேண்டும் என நீதிபதி கர்ணணன் உத்தரவிட்டார். இந்நிலையில் நேற்று வழக்கு விசாரணைக்கு வந்த போது உச்சநீதிமன்றத்தை அவமதிக்கும் நீதிபதி கர்ணனுக்கு 6 மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
நேற்று உத்தரவு வெளியான நேரத்தில் நீதிபதி கர்ணன் சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகையில் தான் இருந்தாராம். தீர்ப்பையடுத்து அவர் செய்தியாளர்களை சந்தித்த போதும் உச்சநீதிமன்ற உத்தரவால் யாரும் செய்தி வெளியிடவில்லை. இந்நிலையில் அவரை கைது செய்வதற்காக காலையில் சேப்பாக்கம் விருந்தினர் மாளிகையில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். உச்சநீதிமன்றம் கைது செய்ய உத்தரவிட்டாலும், உத்தரவு நகல் இன்னும் கையில் கிடைக்காததால் போலீசார் காத்திருப்பதாக கூறப்படுகிறது.