முட்டை ஓடு இல்லாமலும் கோழி குஞ்சு பொரியும்! ஜப்பான் மாணவிகளின் வைரல் வீடியோ
சென்னை: முட்டை கருவில் இருந்து கோழி குஞ்சுகள் உருவாவதற்கு ஓடு என்பது மிக முக்கியமான ஒன்றாகும். முட்டையின் ஓடுதான் அந்த கோழி குஞ்சுக்கு கருப்பையைப் போன்றது என காலகாலமாக மக்களிடையே நீடித்து வந்த நம்பிக்கையை, ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் உள்ள சிபா அரசு உயர்நிலைப்பள்ளியில் படிக்கும் உயிரியல் பிரிவு மாணவிகள் உடைத்திருக்கிறார்கள்.
முன்பெல்லாம் கிராமங்களில் கோழி வளப்பவர்கள், முட்டை போட்ட உடன் பாதுகாத்து வைத்து அடை காக்க வைத்து உற்பத்தியை பெருக்குவார்கள். இன்றைக்குகோழி முட்டைகளை அடைகாக்க வைப்பது என்பது, இன்று இந்தியாவில் உள்ள கிராமங்களில்கூட வழக்கொழிந்துகொண்டிருக்கிறது. கோழிகள் தானாக ஒரு பாதுகாப்பான இடத்தில் முட்டையிட்டு குஞ்சு பொறித்துக் கொள்கிறது.
கோழி வளர்ப்பவர்கள்கூட பெரும்பாலும் இன்குபேட்டரில் பொரிக்கப்பட்ட கோழிக்குஞ்சுகளை வாங்கித்தான் வளர்க்கிறார்கள். இதற்குக் காரணம், முட்டையை பாதுகாப்பாக, உடையாமல் கோழியை அடைகாக்கவைப்பது என்பது தேவையில்லாத வேலை என்று கருதுகிறார்கள். பலரும் நாட்டுக்கோழியை விடுத்து பிராய்லர் கோழியை விரும்பி உண்கின்றனர்.
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இருந்து சுமார் 40 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள சிபா அரசு உயர்நிலைப் பள்ளியில் படிக்கும் உயிரியல் பிரிவு மாணவர்கள் புதிய முயற்சியின் மூலம் பாரம்பரியமான கோழி அடைகாக்கும் நம்பிக்கையை பொய்யாக்கியுள்ளனர்.
ஒரு சாதாரண பிளாஸ்டிக் உறையை எடுக்கும் ஒரு மாணவி அதை ஒரு கூம்பு வடிவிலான பொருளின்மீது வைத்து உறையின் அடர்த்தியை குறைக்கும் வகையில் அதை இழுத்து பெரிதாக்குகிறார். அந்த உறையை ஒரு பிளாஸ்டிக் டம்ளரின்மீது போர்த்தி, முட்டையை உடைத்து டம்ளருக்குள் ஊற்றுகிறார்.
பின்னர், திறந்த நிலையில் அந்த டம்ளரை பொரிப்பானில் (இன்குபேட்டர்) வைத்த பின்னர் முட்டையின் மஞ்சள் கருவின் சிறு துணுக்காக தோன்றும் உயிரணு மூன்றே நாட்களில் இதயமாகவும், அடுத்த 21 நாட்களில் முழு உடல் வளர்ச்சியுடன் முடி, இறக்கை போன்றவையும் வளரப்பெற்ற கோழிக்குஞ்சாக நடைபோடுகிறது.
இதன்மூலம், முட்டையின் ஓட்டுக்குள்தான் குஞ்சுகள் பொரிக்கும் என்னும் பழைய சித்தாந்தம் தவிடுப்பொடியாகி உள்ளது.
இந்த ஆய்வை வீடியோவாக யூடியூப்பில் வெளியிட்டுள்ளனர். இதுவரை அந்த வீடியோவை 5 கோடி பேர் பார்த்திருக்கிறார்கள்.
இந்த ஆய்வின்மூலம் முட்டையின் ஓட்டுக்குள்தான் குஞ்சுகள் பொரிக்கும் என்னும் பழைய நம்பிக்கையை பொய்யாக்கி இருக்கிறார்கள். இதைச் செய்தது பெரிய ஆய்வாளர்கள் இல்லை என்பதுதான் கூடுதல் சுவாரஸ்யம்.
இனி முட்டையில் இருந்து கோழி வந்ததா? கோழியில் இருந்து முட்டை வந்ததா? என்ற பழமொழியில் புதிய மாற்றம் வரவும் வாய்ப்பு உண்டு.