சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியில் அதிக கட்டணம்...சென்னையில் மாணவர்கள் பேரணி!
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தை முழுமையாக அரசு கல்லூரியாக அறிவிக்கக் கோரி மாணவப் பிரதிநிதிகள் சென்னையில் இன்று ஆளுநரை சந்தித்து மனு அளிக்க உள்ளனர்.
சென்னை : சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியை அரசு கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர வலியுறுத்தி சென்னையில் பேரணி நடைபெற்றது.
கடந்த 2013ம் ஆண்டு சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் அரசின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டது. எனினும் அண்ணாமலை பல்கலைக்கழகத்திற்கு உள்பட்ட ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மற்றும் பல்மருத்துவக் கல்லூரியில் அரசின் கட்டணம் வசூலிக்காமல் இருப்பதற்கு மாணவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியினை முழுமையாக அரசு மருத்துவக் கல்லூரியாக அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தி கல்லூரி வாயிலில் மாணவர்கள் கடந்த 29 நாட்களுக்கு மேலாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியை தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவக் கல்லூரியின் கீழ் கொண்டு வர வேண்டும் என்றும் மாணவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இதே கோரிக்கையை வலியுறுத்தி சென்னை எழும்பூரில் இருந்து 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் பெற்றோர் பேரணியாக சென்றனர்.
மாணவர்களிடம் தனியார் கல்லூரிகளில் வசூலிப்பது போல 10 லட்சம் ரூபாய் வரை வசூலித்து அரசே கட்டணக் கொள்ளையை நடத்துவதாக பேரணிக்கு தலைமை தாங்கிய சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத்தின் தலைவர் டாக்டர். ரவீந்திரநாத் குற்றம்சாட்டியுள்ளார்.