இளங்கோவனை "சைக்கோ" என்று வர்ணித்து "கா.சி" ஆதரவாளர்கள் போஸ்டர்!
சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் மற்றும் கார்த்தி சிதம்பரம் ஆதரவாளர்கள் மோதல் முற்றி வருகிறது. இளங்கோவனை சைக்கோ என்று விமர்சித்து கார்த்தி சிதம்பரம் ஆதரவாளர்கள் போஸ்டர் ஒட்டியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கார்த்தி சிதம்பரம், இளங்கோவன் இடையே கடந்த சில வாரங்களாக கடும் வார்த்தைப் போர் நடந்து வருகிறது. கார்த்தி சிதம்பரம் நடத்திய ஜி 67 கூட்டம் குறித்து கடுமையாக விமர்சித்த இளங்கோவன், இதுகுறித்து கார்த்தி சிதம்பரம் விளக்கம் தராவிட்டால் கட்சியை விட்டு டிஸ்மிஸ் செய்யப்படுவார் என்று கூறியிருந்தார்.
விளக்கம் கேட்க இளங்கோவன் யார் என்று கார்த்தி சிதம்பரம் பதிலுக்குக் கேட்டிருந்தார்.
அடுத்து ப.சிதம்பரத்தை ஒரு பிடி பிடித்தார் இளங்கோவன். ப.சிதம்பரம் முதல்வர் வேட்பாளர் என்றால் காங்கிரஸ்காரன் கூட அவருக்கு ஓட்டுப் போட மாட்டான் என்று காட்டமாக கூறியிருந்தார்.
இந்த நிலையில் ஜெயந்தி நடராஜன் கட்சியை விட்டு விலகினார். அதற்கு மகிழ்ச்சியுடன் வரவேற்பு தெரிவித்த இளங்கோவன், ஜெயந்தி நடராஜன் இப்போது போய் விட்டார். அதேபோல இன்னொருவரும், அவரது மகனும் போய் விட்டால் கட்சி தூய்மையாகி விடும் என்று போகிற போக்கில் ப.சிதம்பரத்தையும், மகன் கார்த்தி சிதம்பரத்தையும் விமர்சித்திருந்தார்.
இது காங்கிரஸ் வட்டாரத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கி விட்டது. குறிப்பாக ப.சிதம்பரம் கொந்தளித்து விட்டார். உடனே ராகுல் காந்தியைப் பார்த்து புகார் கூறினார். சோனியா காந்தியும் அதிர்ச்சி அடைந்து தொலைபேசியில் இளங்கோவனைப் பிடித்து வறுத்தெடுத்து விட்டார்
இந்த நிலையில் ப.சிதம்பரத்தைக் கண்டித்து காரைக்குடி பக்கம் இளங்கோவனை கடுமையாக விமர்சித்து கண்டனப் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.
அதில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியை உடைக்க நினைக்கும் அரசியல் கோமாளி .. நீ ஈவிகேஎஸ் இளங்கோவா இல்லை சைக்கோவா என்று விமர்சித்துள்ளனர். நெல்லியான் என்பர் உள்ளிட்டோர் சேர்ந்து இந்த போஸ்டரைப் போட்டுள்ளனர். மேலும் ஹிட்லிஸ்ட்டில் படத்தைப் போட்டு அதை கிராஸ் செய்வது போல இளங்கோவன் படத்தையும் போட்டு குறுக்குக் கோடு போட்டுள்ளனர்.
தமிழக காங்கிரஸ் கட்சியின் உட்கட்சி மோதல் முற்றுகிறது. இளங்கோவனுக்கு எதிராக சிதம்பரம் ஆதரவாளர்கள் சென்னையில் பல்வேறு இடங்களில் நோட்டீஸ் ஒட்டியுள்ளனர்.