சப்-இன்ஸ்பெக்டரைக் கழுத்தை அறுத்துக் கொன்ற வனிதா சிதம்பரம் கோர்ட்டில் ஆஜர்
சிதம்பரம்: போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கணேசன் கொலை வழக்கில் கள்ளக்காதலி வனிதா சிதம்பரம் கோர்ட்டில் நேற்று ஆஜர்படுத்தப்பட்டார்.
விழுப்புரம் மாவட்டம் சேந்தநாடு கிராமத்தை சேர்ந்த பாவாடைசாமியின் மகன் கணேசன் (30). இவர் சிதம்பரம் அண்ணாமலைநகர் போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணி புரிந்து வந்தார். கடந்த வருடம் வேறொரு கள்ளக்காதல் பிரச்சினை தொடர்பாக கிள்ளை போலீஸ் நிலையத்திற்கு வந்த வனிதா (28) என்ற பெண்ணுடன் கணேசனுக்கு முறையற்ற தொடர்பு உண்டானது.
திருமணம் செய்து கொள்வதாக கணேசன் அளித்த உறுதியின் படி இருவரும் கணவன், மனைவியாக வாழ்ந்து வந்துள்ளனர். இதற்கிடையே, வனிதாவுடனான தொடர்பை மறைத்து விழுப்புரத்தைச் சேர்ந்த பெண்ணை முறையாக திருமணம் செய்து கொண்டார் கணேசன். இதனால், கணேசன் மீது ஆத்திரத்தில் இருந்துள்ளார் வனிதா.
இந்நிலையில், கடந்த 22ம் தேதி சிதம்பரம் அண்ணாமலைநகரில் உள்ள தனி வீட்டில் இருந்த கணேசனைச் சந்தித்துள்ளார் வனிதா. ஏற்கனவே கணேசன் மீது கோபத்தில் இருந்த வனிதா, இந்தச் சந்தர்ப்பத்தை தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டார்.
கழுத்தை அறுத்து கணேசனைக் கொலை செய்த வனிதா பஸ்சில் தப்பிச்செல்லும்போது போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
அதனைத் தொடர்ந்து கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்ட வனிதா, கடந்த 6-ந் தேதி சிதம்பரம் மாஜிஸ்திரேட் எண் -1 கோர்ட்டில் ஆஜர்படுத்தப் பட்டார். அப்போது வனிதாவிடம் விசாரணை நடத்திய மாஜிஸ்திரேட் சுரேஷ்குமார், 15 நாட்கள் காவல் நீட்டிப்பு செய்து உத்தரவிட்டார். இதையடுத்து மீண்டும் அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.
காவல் நீட்டிப்பு முடிந்த நிலையில் நேற்று காலை 11.30 மணிக்கு வனிதா பலத்த போலீஸ் பாதுகாப்புடன் மீண்டும் சிதம்பரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது மாஜிஸ்திரேட் சுரேஷ்குமார் செப்டம்பர் 3-ந் தேதிக்கு விசாரணையை தள்ளி வைத்து உத்தரவிட்டார். இதனையடுத்து வனிதா மீண்டும் கடலூர் சிறையில் அடைக்கப்பட்டார்.
கோர்ட்டில் ஆஜரான வனிதாவை பார்க்க அவருடைய பெற்றோர் ராமலிங்கம், தாய் சரஸ்வதி ஆகியோர் வந்திருந்தனர். இவர்களிடம் வனிதா பேசினார். அப்போது வனிதாவின் உடல் நலன் குறித்து பெற்றோர் விசாரித்தனர்.
அதேபோல், வனிதா கோர்ட்டுக்கு வருவதை அறிந்திருந்த சப்-இன்ஸ்பெக்டர் கணேசனின் உறவினர்களும் கோர்ட்டுக்கு வந்திருந்தனர். கோர்ட்டில் அவர்கள் வனிதாவை கண்டபடி திட்டியதால், அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications