சபாநாயகர் தனபாலுடன் எடப்பாடி அவசர ஆலோசனை.. திமுக நெருக்கடி எதிரொலி!
சட்டசபையை கூட்ட வலியுறுத்தி திமுக கோரிக்கை மனு அளித்துள்ள நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, சபாநாயகர் தனபாலை சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார்.
சென்னை: சட்டசபையை கூட்ட திமுக கோரிக்கை விடுத்துள்ள நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, சபாநாயகர் தனபாலை சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார்.
தமிழக பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த மார்ச் 16-ஆம் தேதி நடைபெற்றது. அன்று நிதி அமைச்சர் ஜெயகுமார் பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

பட்ஜெட் தாக்கல் முடிந்ததும், பேரவைத் தலைவர் பி.தனபால் தலைமையில் அலுவல் ஆய்வுக்குழு கூடி பேரவையை எத்தனை நாள் நடத்துவது என்று முடிவு செய்தனர். 2017-18ம் ஆண்டுக்கான முன்பண மானியக் கோரிக்கைகளும் 2016-17-ம் ஆண்டுக் கான இறுதி துணை நிதிநிலை அறிக்கையும் மார்ச் 23-ம் தேதி தாக்கல் செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் மானியக் கோரிக்கைகள் குறித்து விவாதங்கள் நடத்தப்படாமலேயே கூட்டத் தொடரை முடித்து விட்டதால் மீண்டும் சட்டசபையை கூட் வேண்டும் என்று திமுக கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மானியக் கோரிக்கைகள் குறித்து விவாதம் நடத்த வேண்டும் என்ற அந்த தீர்மான நகலை சபாநாயகர் தனபாலிடம் திமுகவினர் அளித்தனர். பின்னர் திமுக கொறடா சக்கரபாணி, முதல்வரை சந்தித்து தீர்மான மனுவை அளித்தார். விரைவில் பேரவையை கூட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் உறுதியளித்துள்ளதாக சக்கரபாணி செய்தியாளர்களிடம் கூறினார்.
இந்த சூழலில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, சபாநாயகர் தனபாலுடன் ஆலோசனை நடத்தி வருவது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.












Click it and Unblock the Notifications