மருந்தை விட மக்கள்தான் எனக்கு உற்சாகம் தராங்க! சோர்வு நீங்கி சுறுசுறுப்பா இருக்கேன்! முதல்வர் பேச்சு
திருப்பத்தூர்: எதிலும் வல்லவர் என்பதால் தான் அமைச்சர் எ.வ.வேலு என்று அழைக்கப்படுகிறார் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார்.
திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2 நாள் அரசுமுறை சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். திருப்பத்தூர் மாவட்டமாக பிரிக்கப்பட்டு புதிய ஆட்சியர் அலுவலகம் கட்டப்பட்டுள்ளது. இதனை திறந்து வைத்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இதனைத்தொடர்ந்து பேசிய மு.க.ஸ்டாலின், விஜயநகர பேரரசின் போது திருவனபுரம் என்ற பெயரில் இருந்தது தான் திருப்பத்தூர் என்று பெயர் மாற்றம் பெற்று விளங்கி வருகிறது. புனிதமான பத்து ஊர்களை கொண்டிருந்ததால் திருப்பத்தூர் என்ற பெயர் வந்ததாகவும் கூறப்படுகிறது. திருப்பத்தூர் மாவட்டத்திற்கு பொறுப்பு அமைச்சராக இருக்கும் எ.வ.வேலு, பல்வேறு பணிகளை முடுக்கிவிட்டுள்ளார். எதிலும் வல்லர் என்பதால் தான் அவருக்கு எ.வ.வேலு என அழைக்கப்படுகிறார்.
லேசான காய்ச்சல் ஏற்பட்டதால், மருத்துவர்கள் ஓய்வெடுக்க அறிவுறுத்தினார்கள். ஆனால் இன்று புதிய உற்சாகத்துக்கு உங்களை சந்திக்க வந்துள்ளேன். மருந்து, மாத்திரைகளை விட மக்களை சந்திக்கும் போது உடல்சோர்வு நீங்கி உற்சாகம் ஏற்படுகிறது. மக்களை சந்திக்கும் போது ஏற்படும் உற்சாகத்திற்கு ஈடு இணை எதுவும் இல்லை.
சில தாய்மார்கள், என் உடல்நிலை குறித்து கேட்டதால், உணர்வுப்பூர்வமாக உணர்கிறேன். மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மிகவும் கம்பீரமாக இருக்கிறது. அதில் பெருமை என்னவென்றால், குறித்த காலத்திற்கு முன்பே பணிகளை முடித்து திறந்து வைத்துள்ளோம் என்று தெரிவித்தார்.