ஜெ. வீட்டில் அமர்ந்து சசிகலாவுடன் 4வது நாளாக ஓ. பன்னீர் செல்வம் ஆலோசனை!
சசிகலாவுடன் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் கட்சி நிர்வாகிகள் இன்று நான்காவது நாளாக ஆலோசனை நடத்தினர். அபோது கட்சி நிலவரம் குறித்து விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது.
சென்னை: சென்னை போயல்கார்டனில் உள்ள ஜெயலலிதாவின் இல்லத்துக்கு சென்ற முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அங்கு சசிகலா மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது அதிமுக பொதுச்செயலாளர் பதவி குறித்து விவாதித்ததாக கூறப்படுகிறது.
முதல்வர் ஜெயலலிதா கடந்த திங்கட் கிழமை இரவு சிகிச்சைப்பலனின்றி சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் உயிரிழந்தார். இதையடுத்து புதிய முதல்வராக அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பொறுப்பேற்றுக் கொண்டார். ஜெயலலிதா வகித்து வந்த அதிமுக பொதுச்செயலாளர் பதவி காலியானது. இதையடுத்து அந்த பதவிக்கு யாரை நியமிப்பது என்ற கேள்வி எழுந்தது.

இதையடுத்து சசிகலா தான் அந்த பதவிக்கு சரியானவர் என ஒரு தரப்பினர் ஆதரவு தெரிவித்தனர். மற்றொரு தரப்பினர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவை பொதுச்செயலாளராக்க கோரிக்கை விடுத்தனர்.
சசிகலாவை அதிமுக பொதுச் செயலாளராக நியமிப்பதில் ஆதரவும் எதிர்ப்பும் நிலவி வருவதால் அதிமுகவின் அடுத்த பொதுச்செயலாளர் யார் என்ற எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரத்தில் அதிகரித்துள்ளது. இந்நிலையில் கடந்த 3 நாட்களாக போயஸ் கார்டனில் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அதிமுக நிர்வாகிகள் மற்றும் சசிகலா ஆகியோர் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
இதில் சசிகலாவை அதிமுக பொதுச்செயலாளராக பொறுப்பேற்க வலியுறுத்தப்படுவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று 4வது நாளாக போயஸ் கார்டனுக்கு சென்ற முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அங்குள் ஜெயலலிதாவின் படத்துக்கு அஞ்சலி செலுத்தினார்.
பின்னர் கட்சியின் தற்போதைய நிலவரம் குறித்து சசிகலாவுடன் ஆலோசனை நடத்தினார். இதில் அமைச்சர்கள் தங்கமணி, சி.வி.சண்முகம், உள்ளிட்ட பல அமைச்சர்கள் மூத்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
மேலும் முன்னாள் அமைச்சர் பொன்னையன், செங்கோட்டையன், பா.வளர்மதி, தளவாய் சுந்தரம், செந்தில்பாலாஜி, டிகேஎம் சின்னையா, முக்கூர் சுப்பிரமணி, பச்சைமால், மாவட்ட செயலாளர்கள் பலர் மற்றும் கட்சி நிர்வாகிகள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.












Click it and Unblock the Notifications