போலீஸ் பழனிச்சாமியை பந்தாடும் முதல்வர் பழனிச்சாமி -சேலத்தில் நடக்கும் அதிகார யுத்தம்!
போலீஸ் ஏட்டு பதவியில் இருக்கும் பழனிச்சாமி என்பவரை அடிக்கடி வெவ்வேறு ஊர்களுக்கு டிரான்ஸ்பர் செய்து தண்ணி காட்டி வருகிறார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. இந்தச் செய்தி சேலத்தை பதற வைத்துள்ளது.
சேலம்: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் சொந்த ஊரான சேலம் மாவட்டம் எடப்பாடி அருகிலுள்ள சிலுவம்பாளையத்தைச் சேர்ந்தவர் பழனிச்சாமி. 47 வயதான இவர், 1997ம் ஆண்டு போலீஸ் வேலைக்குத் தேர்வானார்.
ஆரம்பகால போலீஸ் வேலை மகிழ்ச்சியாக பழனிச்சாமிக்குச் சென்றுள்ளது. சில ஆண்டுகளுக்குப் பிறகு, பல மாவட்டங்களில் பணியாற்றிய அனுபவத்தோடு சேலம் மாவட்டத்துக்கு வந்தார் பழனிச்சாமி. எடப்பாடி சிலுவம்பாளையத்தில், முதல்வர் பழனிச்சாமியின் வீட்டுக்கு நேர் எதிரேதான் போலீஸ் ஏட்டு பழனிச்சாமியின் வீடும் உள்ளது. கடந்த 2015ம் ஆண்டு போலீஸ் ஏட்டு பழனிச்சாமிக்கும், முதல்வர் பழனிச்சாமியின் சகோதரர் கோவிந்தராஜுக்கும் இடையே திடீர் தகராறு ஏற்பட்டுள்ளது.
போலீஸ் ஏட்டு பழனிச்சாமிக்கு சரமாரியாக அடிஉதை விழுந்துள்ளது. முதல்வர் பழனிச்சாமியின் சகோதரர் கோவிந்தராஜ் உட்பட சிலர் போலீஸ் ஏட்டை கடுமையாகத் தாக்கியுள்ளனர்.
போலீஸ் பழனிச்சாமி தாக்கப்படும் வீடியோ
போலீஸ் ஏட்டு தாக்கப்படும் காட்சிகள் வீடியோவாக சென்ற 2016 சட்டசபை தேர்தலின் போது, வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவியது. அதனை போலீஸ் ஏட்டு பரப்பியதாக அவரே கூறியிருந்தார்.
எடப்பாடியில் கடும் எதிர்ப்பு
போலீஸ் பழனிச்சாமியின் வீடியோ எடப்பாடியில் பரவியது. அதனால் முதல்வர் பழனிச்சாமிக்கு தொகுதியில் கடும் எதிர்ப்புக் கிளம்பியது. ஆனாலும் தேர்தலில் பழனிச்சாமி வெற்றிப் பெற்று, அமைச்சர் பதவியையும் பெற்றார். அதனால் சேலம் மாவட்டத்தில் அவரது கை வலுவானது.
சண்டியரான சகோதரர் கோவிந்தராஜ்
முதல்வர் பழனிச்சாமி 'பதவி உயர்வு' பெற்ற பிறகு அவரின் சகோதரர் கோவிந்தராஜ் சேலம் மாவட்டத்தின் சண்டியரானார். அவரின் முதல் பார்வை போலீஸ் ஏட்டு பழனிச்சாமி மீதுதான் விழுந்தது. போலீஸ் பழனிச்சாமி மல்லுார் ஸ்டேஷனுக்கு துாக்கி அடிக்கப்பட்டார்.
கலந்தாய்வில் கல்தா
இந்த நிலையில் சேலம் மாவட்ட போலீசாருக்கு கடந்த ஏப்ரலில், போலீசாருக்கான பணி மாறுதல் கலந்தாய்வு நடத்தப்பட்டது. அதில் எடப்பாடி போலீஸ் ஸ்டேஷனில் பணி ஒதுக்க, ஏட்டு பழனிச்சாமி கோரிக்கை விடுத்தார். அதன்படி அவருக்குப் பணி ஒதுக்கப்பட்டு, பின்னர் அது ரத்தும் செய்யப்பட்டது. அதனையடுத்து சேலம் மல்லுார் போலீஸ் நிலையத்துக்கே திரும்ப சென்று பாணியாற்றினார்.
இரவோடு இரவாக சேலத்திலிருந்து தர்மபுரிக்கு
போலீஸ் ஏட்டு பழனிச்சாமியை நேற்று இரவு 10:30 மணிக்கு தர்மபுரி மாவட்டத்துக்கு மாற்றம் செய்து எஸ்.பி., ராஜன் உத்தரவு பிறப்பித்தார். இதையடுத்து, தர்மபுரியில் பணியில் இணைவதற்காக, பழனிச்சாமி புறப்பட்டுச் சென்றார்.
போலீஸ் பழனிச்சாமி உயிருக்கு ஆபத்து!
இது குறித்து போலீஸ் ஏட்டு பழனிச்சாமி," நான் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவன். முதல்வரிடம் போலீஸ் துறை உள்ளது. அதனால் அவரின் சகோதரர் என்னை பழிவாங்கும் நோக்கில், தொடர்ந்து பணி மாற்றம் செய்ய அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுக்கிறார். இதனை முதல்வரும் கண்டுகொள்வதில்லை.
அது மட்டுமின்றி, எனக்கு கொலை மிரட்டலும் வருகிறது. எனக்கோ, என் குடும்பத்தினரின் உயிருக்கோ ஆபத்து ஏற்பட்டால், அதற்கு முதல்வர் பழனிசாமியும் அவரின் சகோதரர் கோவிந்தராஜ் மற்றும் சேலம் மாவட்ட போலீஸ் உயரதிகாரிகள் தான் பொறுப்பேற்க வேண்டும்." என்று தெரிவித்தார் கண்ணீரோடு.