புதிய திட்டங்கள் பற்றிய ஐடியாக்களை அரசுக்கு அனுப்புங்க! அரசு அதிகாரிகளுக்கு ஸ்டாலின் ஃபுல் ஃபிரீடம்!
விழுப்புரம்: அரசின் ஆணைகளை மட்டும் செயல்படுத்துபவர்களாக இல்லாமல் நீங்கள் செயல்படுத்த விரும்பும் புதிய திட்டங்களையும் அரசிற்கு தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியர்களுக்கும், அரசு உயர் அதிகாரிகளுக்கும் முழு சுதந்திரம் வழங்கியுள்ளார் முதல்வர் ஸ்டாலின்.
அரசு உங்கள் நல்ல பணிக்கு என்றும் உறுதுணையாக இருக்கும் என்ற உறுதியையும் அவர்களுக்கு வழங்கியுள்ளார்.
விழுப்புரத்தில் 3 மாவட்டங்களில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் பற்றி கள ஆய்வு நடத்திய ஸ்டாலின், அந்தக் கூட்டத்தில் பேசியதாவது;

''கோட்டையில் எனது அறையில் டேஷ்போர்டு வைத்துள்ளேன். ஒவ்வொரு திட்டமும் எந்தளவு முன்னேற்றம் கண்டுள்ளது என்பதை அதன் மூலமாக அவ்வப்போது அறிந்தும் வருகிறேன்.
அதேபோல் மாவட்ட அளவிலும் உங்களுக்கு அத்தகைய கண்காணிப்பு மிகமிக அவசியம். தொடர்ச்சியாக கண்காணித்தாலே எந்தத் திட்டமாக இருந்தாலும் அது சிறப்பாக நிறைவேறிவிடும்.
மாவட்ட நிருவாகம் என்பது மக்களுடன் நேரடி தொடர்பில் உள்ள அமைப்பாகும். எல்லாத் திட்டங்களும் மாவட்ட அதிகாரிகளாகிய உங்கள் மூலமாகவே நடைமுறைப்படுத்தப்படுகின்றன.
அவை எந்தளவுக்கு விரைவாக சென்றடைகிறது என்பது உங்கள் திறமையை பொறுத்தது. நீங்கள் நல்ல திறமைமிக்க அலுவலர்கள் என்பதை நிரூபிக்க வேண்டும். அதன்மூலம் மக்கள் நற்பயன் பெற வேண்டும்.

உங்களுக்கு மேலே உள்ள அதிகாரிக்கும், உங்களுக்கும் ஒருங்கிணைந்த செயல்பாடு இருப்பதைப் போல உங்களுக்கு அடுத்த நிலையில் இருக்கும் அலுவலர்களோடு அதே ஒருங்கிணைப்பு இருக்க வேண்டும்.
மக்களோடு பழகி அவர்களின் தேவை அறிந்து செயலாற்றுங்கள். அவர்களின் பாராட்டினை பெறும் வகையில் உங்கள் பணி அமைய வேண்டும். அரசின் ஆணைகளை மட்டும் செயல்படுத்துபவர்களாக இல்லாமல் நீங்கள் செயல்படுத்த விரும்பும் புதிய திட்டங்களை அரசிற்குச் சொல்லி முன்மொழிவுகள் அனுப்புங்கள்.
அரசு உங்கள் நல்ல பணிக்கு என்றும் உறுதுணையாக இருக்கும் என்று தெரிவித்து, இந்த அளவில் என் உரையை நிறைவு செய்கிறேன்.''












Click it and Unblock the Notifications