உடைந்த பலூனை விழுங்கி உயிரிழந்த குழந்தை – பெரம்பலூரில் பரிதாபம்!
பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டத்தில் பலூனை சாப்பிட்ட குழந்தை ஒன்று மூச்சுத்திணறி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள சாத்தனூர் கிராமத்தை சேர்ந்தவர் பெரியசாமி. இவரது மனைவி பாசமலர்.
இவர்களுக்கு உதயகுமார் மற்றும் பிறந்து 8 மாதமே ஆன ஆண் குழந்தை பிரவீன்குமார் என இரண்டு குழந்தைகள் இருந்து வந்தனர்.
ஊதப்பட்ட பலூன்:
இந்த நிலையில் நேற்று சிறுவன் உதயகுமார் காற்று ஊதப்பட்ட பலூனை வைத்து கொண்டு விளையாடி கொண்டிருந்தான். அப்போது திடீரென பலூன் வெடித்தது.
வெடித்துக் கிழிந்த பலூன்:
இதில் பலூன் இரண்டு மூன்று துண்டுகளாக கிழிந்து பல்வேறு இடங்களில் சிதறிக் கிடந்தது. பலூன் துண்டுகளை வீட்டில் உள்ளவர்கள் அப்புறப்படுத்தாமல் அப்படியே விட்டுவிட்டனர்.
விழுங்கிய குழந்தை:
அப்போது வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை பிரவீன்குமார் பலூன் ரப்பர் துண்டுகளை எடுத்து விழுங்கினான். சிறிது நேரத்தில் தொடர்ந்து அழுத குழந்தை பிரவீன்குமார், பின்னர் மயங்கினான்.
உயிருக்கு போராடிய குழந்தை:
இதனால் வீட்டில் இருந்தவர்கள் அதிர்ச்சியடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த பிரவீன்குமாரை அருகில் உள்ள கொளக்காநத்தம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.
மூச்சுத்திணறலால் பலி:
அங்கு பிரவீன்குமாரை பரிசோதித்த டாக்டர்கள் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். மேலும் குழந்தை பலூனை விழுங்கியதால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு இறந்ததாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
போலீஸ் விசாரணை:
இது குறித்து கிராம நிர்வாக அலுவலர் செந்தில்குமார் கொடுத்த புகாரின் பேரில் மருவத்தூர் போலீஸ் வழக்கு பதிவு செய்து குழந்தையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். பலூனை விழுங்கி குழந்தை இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.