குழந்தை திருமணம்..போலீஸ் விசாரணையில் மனித உரிமை மீறல்.. சிதம்பரம் தீட்சிதர்கள் குற்றச்சாட்டு
சிதம்பரம் : உச்ச நீதிமன்ற குழந்தைகள் நல ஆணைய வழிகாட்டுதல்களை மீறி தீட்சிதர்களின் குழந்தைகளை விசாரணை செய்வது குறித்து தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு மையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு மாநில குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம், தமிழக அரசு உள்துறை செயலாளர், காவல்துறை தலைமை இயக்குனர் ஆகியோருக்கும் தீட்சிதர்கள் புகார் மனு அனுப்பியுள்ளனர்.
கடலூர் மாவட்டம், சிதம்பரத்திலுள்ள புகழ்பெற்ற நடராஜர் கோயிலை நிர்வகித்துவரும் தீட்சிதர்கள் தொடர்பாக பல்வேறு சர்ச்சைகள் எழுந்த வண்ணம் உள்ளன. தங்களுடைய குழந்தைகள், திருமண வயதை அடைவதற்கு முன்பாகவே, இந்த தீட்சிதர்கள் சட்டத்துக்குப் புறம்பாக திருமணம் செய்துவைப்பதாகப் புகார்கள் எழுந்துவந்த நிலையில், அண்மையில் சில வாரங்களாகக் குழந்தைத் திருமணப் புகாரில் அடுத்தடுத்து கைது நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கடந்த 2021ஆம் ஆண்டு, ஜனவரி மாதம், சிதம்பரம் தீட்சிதர்களின் இரு குடும்பத்தைச் சேர்ந்த 13 வயது சிறுமிக்கும், 17 வயது சிறுவனுக்கும் திருமணம் நடத்தப்பட்டதாக புகார் எழுந்தது. இந்தக் குழந்தைத் திருமண சம்பவம் குறித்து, மாவட்ட சமூகநலத்துறைக்கு வந்த தகவல் மற்றும் ஆதாரங்களின் அடிப்படையில், சிதம்பரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டிருக்கிறது.
கன்னியாகுமரியை சேர்ந்த 11 மாத குழந்தை.. கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்து சாதனை
குழந்தை திருமணம் 2 பேர் கைது
இதற்கிடையே 13 வயது சிறுமிக்கும், 17 வயது சிறுவனுக்கும் திருமணம் செய்துவைத்த காரணத்துக்காக, சிறுமியின் தந்தையையும், சிதம்பரம் நடராஜர் கோயிலின் செயலாளருமான ஹேமசபேச தீட்சிதரையும், சிறுவனின் தந்தை வெங்கடேச தீட்சிதரையும் கைதுசெய்த போலீஸார், இருவர் மீதும் குழந்தைத் திருமண தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவுசெய்தனர். அதன் பின்னர், சிதம்பரம் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, 15 நாட்கள் சிறைக் காவலில் அடைத்தனர்.
தீட்சிதர்கள் மனு
உச்ச நீதிமன்ற குழந்தைகள் நல ஆணைய வழிகாட்டுதல்களை மீறி தீட்சிதர்களின் குழந்தைகளை விசாரணை செய்வது குறித்து தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு மையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு மாநில குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம், தமிழக அரசு உள்துறை செயலாளர், காவல்துறை தலைமை இயக்குனர் ஆகியோருக்கும் தீட்சிதர்கள் அனுப்பியுள்ள புகார் மனுவில், சிதம்பரம் நடராஜர் கோவிலில் தீட்சிதர்கள், அர்ச்சகர்களாகவும், அறங்காவலர்களாகவும் உள்ளனர். எங்கள் சமுதாயத்தில் குழந்தை திருமணம் நடந்ததாக ஒரு பட்டியலை எங்களுக்கு எதிராக செயல்படும் அமைப்பு சமூக நல அலுவலரிடம் கொடுத்துள்ளனர்.
பெற்றோர்கள் கைது
குழந்தை திருமண தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து, கைது நடவடிக்கை மேற்கொண்டனர். பெண் குழந்தைகளை நீதிமன்றம் மற்றும் குழந்தை நல ஆணையம் கூறிய வழிமுறைகளை மீறி விசாரணை என்ற பெயரில் பரிசோதனைகளுக்கு உட்படுத்துகின்றனர். பெண் குழந்தைகளை கட்டாயப்படுத்தி ஒப்புதல் வாக்குமூலம் வாங்கி பெற்றோர்களை கைது செய்கின்றனர்.
மனித உரிமை மீறல்
பெண் குழந்தைகளின் தாயாரை காவல் நிலையத்திற்கு இரவு 11:30 மணி வரை வைத்து விசாரணை நடத்துகின்றனர். அவர்கள், விசாரணையின் போது மனித உரிமை மீறல்களும் பெண் குழந்தைகளின் நலமும் பாதிக்கப்பட்டதாக கூறுகின்றனர். இளம் சிறார்களை விசாரணை என்ற பெயரில் தமிழ்நாடு காவல்துறை குழந்தை நல ஆணைய வழிமுறைகளை கடைபிடிக்காமல் விசாரணைக்கு உட்படுத்துவார்கள் என்று அச்சப்படுகிறோம்.
நேர்மையான விசாரணை தேவை
நடுநிலையான தமிழக அரசு கட்டுப்பாட்டில் இல்லாத அமைப்பு விசாரித்தால் தான் நேர்மையான விசாரணை நடைபெறும். காவல்துறையின் மனித உரிமை மீறல்கள் விசாரணை செய்யவும் அத்தகைய மனித உரிமை மீறல்களை உடனடியாக தடுத்து நிறுத்த தமிழக காவல்துறை தலைவருக்கும், உள்துறை செயலாளருக்கும் உத்தரவு பிறப்பித்து குழந்தை நல உரிமைகளை காப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் கூறப்பட்டுள்ளது.