ஜெயலலிதாவிற்கு அஞ்சலி செலுத்த வந்து சசிகலா புகழ் பாடிய தாணு
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவிற்கு அஞ்சலி செலுத்த வந்த இடத்தில் தமிழகத்திற்கு தலைமையேற்க வருமாறு சசிகலாவிற்கு அழைப்பு விடுத்துள்ளார் தாணு.
சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்தில் திரையுலகினர் அஞ்சலி செலுத்தினர். சென்னை பல்கலைக்கழத்தில் இருந்து ஊர்வலமாக சென்று ஜெயலலிதா நினைவிடத்தில் திரையுலகினர் மலர்கள் தூவியும் தங்களது அஞ்சலியை செலுத்தினர்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த 5ம் தேதி அப்பல்லோ மருத்துவமனையில் உயிரிழந்தார். அவரது உடல் எம்.ஜி.ஆர் நினைவிடத்தில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. டிசம்பர் 7ம் தேதி முதல் தமிழகம் முழுவதிலும் இருந்தும் ஏராளமான தொண்டர்கள் தினசரியும் வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். மொட்டை போட்டும் படையல் போட்டும் கண்ணீர் மல்க தொண்டர்கள் அஞ்சலி செலுத்துகின்றனர்.
19வது நாளான இன்று அதிமுக தொண்டர்கள் காலை முதலே ஜெயலலிதா சமாதியில் வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். மொட்டை போட்டு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் சென்னை பல்கலைக்கழத்தில் இருந்து ஊர்வலமாக சென்ற திரை உலகத்தினர் ஜெயலலிதா நினைவிடத்தில் அடக்கம் செய்யப்பட்ட இடத்திற்கு உள்ளே அனுமதிக்கப்பட்டனர். அனைவருமே உள்ளே சென்று மலர்கள் தூவியும் தங்களது அஞ்சலியை செலுத்தினர்.
அதிமுக தொண்டர்கள் கொண்டு வரும் பூக்களை கூட அலட்சியமாக வாங்கி எறிந்து விடுகின்றனர். திரை உலக பிரபலங்களுக்கு மட்டும் உள்ளே சென்று அஞ்சலி செலுத்த அனுமதி தருகின்றனர்,
செய்தியாளர்களிடம் பேசிய தாணு, எடுத்த எடுப்பிலேயே சின்னம்மா கட்சிக்கு தலைமையேற்க வேண்டும், தமிழகத்தை சின்னம்மா வழி நடத்த வேண்டும் என்றார். மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் காலை உலகத்திற்கு ஈடு செய்ய முடியாத இழப்பு என்று கூறினார்.
ஜெயலலிதா நினைவிடத்திற்கு அஞ்சலி செலுத்த வந்த இடத்தில் சசிகலாவை தலைமையேற்க அழைப்பு விடுத்தது ஏன் என்று தொண்டர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.